கேரள அரசு 51 இளம் பெண்கள் சபரிமலை சென்றதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில், பெரும்பாலான பெண்கள் 50 வயதைத் தாண்டியவர்கள் என்றும் பலரது முகவரியும் போலியான முகவரி என்றும் கேரளத்தில் மலையாள டிவி சேனலான ஜனம் டிவி ஆதாரங்களுடன் பட்டியல் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சபரிமலைக்கு கேரள கம்யூனிஸ அரசால் அனுப்பி வைக்கப்பட்ட கம்யூனிஸ பின்னணி பெண்களான பிந்து, கனகதுர்கா இருவரும் போலீஸாரின் கடும் பாதுகாப்பில் வீடு திரும்பினர்.
இதனிடையே, கனகதுர்கா தனது மாமியாரால் தாக்கப்பட்டதாக ஒரு புகாரை போலீஸில் கொடுத்தார். இதை அடுத்து அந்த மாமியாரும் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால், கனகதுர்கா தான் தன்னைத் தாக்கியதாக அவர் ஊடகங்களில் தெரிவித்தார். இது அரசுத் தரப்பு செய்துவரும் நாடகம் என்று விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்நிலையில், கனகதுர்கா உச்ச நீதிமன்றத்தில் தனக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இது குறித்து விசாரித்த உச்ச நீதிமன்றம், கேரள அரசிடம் விளக்கம் கேட்டது. அப்போது, உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்த கேரள அரசு, தாங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து அதை நடைமுறைப் படுத்தியதாகவும், இதுவரை சபரிமலைக்கு 51 பெண்கள் வந்ததாகவும், அதில் தமிழகத்தைச் சேர்ந்த 24 பெண்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேரளத்தின் மலையாள சேனலான ஜனம் டிவி., ஒரு தகவலை வெளியிட்டது. அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் 50 வயதைக் கடந்தவர்கள் என்றும், உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பொய் சொல்லியிருப்பதாகவும் கூறியது.
மேலும் அந்த 51 பட்டியலை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் அந்தப் பட்டியல்…