எதிர்க்கட்சிகளை தூண்டிவிட்டு அரசியல் செய்யும் திமுக., ஒரு ரவுடிக் கட்சி என்று கூறினார் அமைச்சர் செல்லூர் ராஜு.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை நிலையத்தின் தலைமை அலுவலகத்தில் சில்லரை விற்பனை மையத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். மேலும், தமிழகம் முழுதும் உள்ள கூட்டுறவு சங்கங்களை கணினி வழியே இணைக்கும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட மையத்தை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு ஊழியர்கள் போராட்டத்தை எதிர்க்கட்சிகளே தூண்டி விடுகின்றன! இரண்டாவது முதலீட்டாளர் மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தமிழக இளைஞர்களுக்கு வரப் பிரசாதமாக சுமார் 10 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கோடநாடு விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்! அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாத எதிர்க்கட்சித் தலைவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்!
கொலை, கொள்ளை போன்ற நடவடிக்கைகளில் திமுகதான் ஈடுபடும்! திமுக ஒரு ரவுடி கட்சி! எப்படிப்பட்ட ஜகஜ்ஜால கில்லாடி வேலை செய்தாலும் தமிழக அரசு மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அகற்ற முடியாது!
கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் உரங்கள் பிளாஸ்டிக் பைகளில் வழங்கப்படாமல் அரசு நிர்ணயம் செய்த அளவீட்டின்படி தயாரிக்கப்பட்ட மாற்றுப் பொருட்களை வைத்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது… என்று கூறினார்.