மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் சந்தித்துப் பேசியதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டி.டி.வி.. தினகரனின் நடவடிக்கைகளால், சசிகலாவின் சகோதரர் திவாகரன் “அண்ணா திராவிடர் கழகம்” என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கினார். அமமுகவில் இருந்து பலர் விலகி வருவதால் அக்கட்சி மூழ்கும் கப்பலாக உள்ளது என்று அவர் விமர்சித்திருந்தார்.
ஒரு கட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்ப்பார் என்றும் கூட பரவலாக பேசப்பட்டது. திவாகனனின் மகன் ஜெய் ஆனந்த் திவாகரன் “சுபாஷ் சந்திரபோஸ்” பெயரில் இயக்கம் தொடங்குவதாகவும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தில்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை ஜெய் ஆனந்த் திவாகரன் சந்தித்து பேசியுள்ளார். தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலையில் இதை ஒரு விஷயமாகவே பலரும் பார்க்கின்றனர்.
பியூஷ் கோயல்தான்… நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழக பாஜகவின் பொறுப்பாளர். எனவே, இந்த சந்திப்பு கவனிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது. எதற்கான சந்திப்பு இது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஏற்கனவே தமிழகத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி உருவாகும் என்று கூறப்படும் நிலையில் அதில் பாஜகவும் நிச்சயமாக இணையும் என்று கூறப்படுகிறது. எனவே, திவாகரன் மகன் சந்திப்பு.. அரசியலை ஒட்டியதாகவே இருக்கும் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன.