அதிமுக-பாஜக கூட்டணி கிட்டதிட்ட முடிவானதாக தகவல் என்று, பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. இன்னும் சில நாட்களில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. அதற்குள் கூட்டணி குறித்து முடிவு செய்து கொள்ள பல கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப் படட்டும் அதன் பின்னர் கூட்டணி குறித்து பேசிக் கொள்ளலாம் என்று கடைசி வரை இழுத்தடித்து, கூட்டணி இல்லாமல் அதிமுக., பழைய பாணியில் தேர்தலை சந்திக்கவுள்ளது என்று ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் எதிர்த் தரப்பால் பரப்பப் பட்டது.
அதே நேரம், அதிமுக., தலைமையில் மெகா கூட்டணி அமைகிறது என்று ஒரு தகவல் பகிரப் பட்டு வந்தது. திமுக.,வில் விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக., ஆகிய தோழமைக் கட்சிகளுக்கு எத்தகைய இடத்தை திமுக., வழங்கப் போகிறது என்பது தெரியாத நிலையில், பாமக., எதிர்த்தரப்பு கூட்டணியில் சேராது என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் ஒரு தகவலைப் பரப்பி வருகின்றனர். அடுத்த கூட்டணியில் குழப்பம் நீடித்தால் போதும், தங்கள் கூட்டணி அமைவது அடுத்த பட்சம் என்று இரு தரப்புமே எண்ணுவதால், குழப்பமான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
இதனால்தான், வாட்ஸ்அப் சமூக வலைத்தள நிறுவனம் மிகவும் நொந்து போய், பொய்த் தகவல்களை அதிகம் பரப்புவது இந்தியக் கட்சிகள் தான் என்று கூறியது. அதற்கு ஏற்ப, கூலிக்கு வேலையாட்களை நியமித்து திமுக.,வினர் இத்தகைய பிரசாரங்களைச் செய்து வருவதாக குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர் அதிமுக.,வினர். திமுக., சமூக வலைத்தளப் பிரிவினருக்கு தீனி கொடுப்பது போல், அதிமுக.,வின் தம்பிதுரை அவ்வப்போது ஏதாவது கூறி, கூட்ட்ணிச் சிக்கல் நீடித்து வருவதாக சொல்லிக் கொண்டே இருக்கிறார். அவருக்கு உதவியாளராக ராமநாதபுரம் எம்பி., அன்வர் ராசாவும் வாய்திறந்து வருகிறார்.
இந்நிலையில், அதிமுக., கூட்டணி கிட்டத்தட்ட முடிவாகி விட்டது என்று ஒரு தகவல் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில், அதிமுக – 20, பாஜக -12, தேமுதிக-4, பாமக -4 . (பாஜக வின் 12 இடங்களில் கொங்கு ஈஸ்வரன் 1 , புதிய தமிழகம் 1 , ஏ சி சண்முகம் 1 , என் ஆர் காங்கிரஸ் 1 – இவர்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் போட்டி) என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால், பாமக.,வும் தேமுதிக.,வும் தங்களுக்கு 4 இடங்களா என்று தம் கட்டி வருகின்றனர். இதயத்தில் இடம் இருக்கிறது என்று கருணாநிதி பாணியில் இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு அதிமுக.,வில் இதயம் கனிந்தவர்கள் எவரும் இல்லை என்பதால், கூட்டணி முடிவானாலும் ஒதுக்கீடு பிரச்னையாகவே இருக்கும் என்கிறார்கள்!