தேசியக் கட்சிகளை நாங்கள் எப்படி தமிழகத்தில் வரவிடுவோம் என்று, மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரை கேள்வி எழுப்பினார்.
அதிமுக.,வில் இருக்கும் தினகரனின் ஸ்லீப்பர் செல் என்று வர்ணிக்கப் படுபவரும், அதிமுக.,வில் மோடியையும் பாஜக.,வையும் எதிர்க்கும் அணியைச் சேர்ந்தவருமான மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரை, திருச்சி அருகே மணப்பாறையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “தமிழ்நாட்டுக்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களோடு தான் அதிமுக கூட்டணி அமைக்கும் என முதல்வர் கூறியுள்ளார். தமிழ்நாட்டுக்கு யார் நல்லது செய்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். காலப்போக்கில் அது தெரியும். பாஜகவை நான் விமர்சிப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் பாஜக தலைவர்கள் என்ன பேசுகிறார்கள்?
திராவிடக் கட்சிகளை நாங்கள் தமிழ்நாட்டுக்குள் வரவிட மாட்டோம் என்கிறார்கள்! ஆம்.அதற்கு நான் பதில் சொல்ல வேண்டும். தேசியக் கட்சி என சொல்லிக் கொள்ளும் இவர்களை நாங்கள் எப்படி வரவிடுவோம் என்று கேள்வி எழுப்பினார்.
தேசியக் கட்சிகள் தமிழகத்தில் வரக்கூடாதா என்ன? தேசியக் கட்சியான காங்கிரஸை ஓரங்கட்டித்தான் திராவிடக் கட்சிகள் இங்கே வளர்ந்தன. அதன் பின்னர் தமிழகத்தை ஒட்டுமொத்தமாக இரு திராவிடக் கட்சிகளும் மாறி மாறி கொள்ளை அடித்து, தமிழகத்தின் வளத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டு வெகுகாலமாக உள்ளது.
சொல்லப் போனால், அதிமுக., தன் கட்சிப் பெயரை அகில இந்திய அண்ணா திமுக., என ஒரு தேசியக் கட்சியாகத்தான் பதிவு செய்திருக்கிறது. கர்நாடகா, மும்பை, திருவனந்தபுரம் என அக்கட்சி கிளைகளை வைத்திருக்கிறது. அந்த வரலாறு கூடத் தெரியாமல், தம்பிதுரை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் ஏதோ உளறிக் கொட்டுகிறார் என்றும், இவர் மக்களவையின் துணைத்தலைவராக இருப்பதற்கு லாயக்கற்றவர் என்றும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதனிடையே, தம்பிதுரையின் கருத்துகள் அதிமுகவின் அதிகாரபூர்வ கருத்துகள் இல்லை என்று தமிழக பாஜக,.,வும் அவ்வப்போது கூறிவருகிறது. அதுபோல், தம்பிதுரை தான் கூறும் பாஜக., எதிர்ப்புக் கருத்துகளுக்கு எங்களிடம் விளக்கம் அளித்து விடுகிறார் என்று அண்மையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூறியிருந்தார். அப்படி எனில், ஓபிஎஸ்., ஈபிஎஸ் இருவருக்கும் தெரிந்து அல்லது அவர்களின் தூண்டுதலில்தான் தம்பிதுரை இவ்வாறு பேசி வருகிறார் என்றோ அல்லது, தம்பிதுரையை தங்களால் ஒன்றும் கண்டிக்கவோ தவறு சொல்லவோ முடியவில்லை என்றும் ஓபிஎஸ் ஒப்புக் கொள்கிறாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.