தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன் என்று பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி மீண்டும் மீண்டும் இன்று மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். அவர் குற்றம் சாட்டுவது போல்… மோடி ஒரு திருடரே! அது எப்படித் தெரியுமா?
உத்தரப் பிரதேச கிழக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா ராபர்ட் வத்ரா நியமிக்கப்பட்டதை அடுத்து, அவர் இன்று சாலை வழியாக தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். பிரியங்கா பொறுப்பில் நியமிக்கப் பட்ட பின்னர் நடைபெறும் முதல் பிரசாரம் இது!
இந்தப் பிரசாரத்துக்கு பெரும் அளவில் கூட்டம் கூடியது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுலும் பங்கேற்றார். அப்போது ராகுல், தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன் என்று கோஷமிட்டார். உடனே அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களும் திருப்பி கோஷம் எழுப்பினர். இதையடுத்து பிரதமரைத் தாக்கி ராகுல் பேசினார்…
“தேசத்தின் பாதுகாவலர் உத்தரப் பிரதேச மக்களின் பணத்தையும், இந்திய விமானப் படை பணத்தையும் மற்றும் பலர் பணத்தையும் கொள்ளை அடித்துவிட்டார். தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன்!
உத்தரப் பிரதேசம் இந்தியாவின் இதயம். உத்தரப் பிரதேச பொதுச் செயலாளர்களாக பிரியங்கா மற்றும் ஜோதிர்ஆதித்யா சிந்தியாவை நியமித்துள்ளேன். உத்தரப் பிரதேசத்துக்கு நிகழும் அநீதிக்கு எதிராக சண்டையிட அவர்களிடம் தெரிவித்துள்ளேன். உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் சித்தாந்தம் கொண்ட அரசு அமையும் வரை நாங்கள் ஓயமாட்டோம்” என்றார்.
உண்மையில் ராகுல் கூறியது போல் மோடி ஒரு திருடர்தான்!
கடந்த 2007ஆம் ஆண்டு குஜராத் தேர்தலின் போது, அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடியை ஒரு மரண வியாபாரி என்று வர்ணித்தார் சோனியா! அந்தத் தேர்தலில் மோடி மக்கள் மனத்தை வென்று மீண்டும் முதல்வர் ஆனார். இப்போது 12 வருடங்கள் கழிந்துவிட்டன. மீண்டும் சோனியாவின் மகன் ராகுல் அதே மோடியை ஒரு திருடன் என்கிறார். இப்போது மோடி பிரதமர் ஆக இருக்கிறார்.!
சோனியா அவ்வாறு மெர்சண்ட் ஆஃப் டெத் என, அதாவது மோடி ஒரு மரண வியாபாரி என விளம்பரப் படுத்த, அப்போது தமிழகத்தில் அரசியல் விமர்சன வானில் கோலோச்சிக் கொண்டிருந்த துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ ராமசாமி, சென்னையில் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சியில் மொடியை அறிமுகப் படுத்திய போது… மோடி ஒரு மரண வியாபாரிதான்! என்று சொல்லி… பயங்கரவாதத்துக்கு, ஊழலுக்கு, முறைகேடுகளுக்கு, சோம்பேறித்தனத்துக்கு, அதிகார வர்க்கத்தின் இயலாமைக்கு என்று எல்லா பின்னிழுக்கும் சக்திகளுக்கும் மரண வியாபாரிதான்! என்று அறிமுகப் படுத்தி மேடை ஏற்றினார். !
இன்று துக்ளக் ஆசிரியர் சோ இல்லை! இருந்திருந்தால், அதே பாணியில் மோடி ஒரு திருடன் என்று சொல்லி… இப்படியெல்லாம் கூறியிருப்பார்..!
ஆம்.. மோடி ஒரு திருடன் தான்!
நாட்டு வங்கிகளிடம் இருந்து திருடி திவாலாக்கிவிட்டு தப்பியோடிய மல்லையா, நீரவ் மோடி வகையறாக்களிடம் இருந்து திருடினார்…
ஏய்த்து திருடிக் கொண்டிருந்த அம்பானி அதானி போன்றவர்களிடம் இருந்து திருடினார்…
வரிகட்டாமல் ஏய்த்து திருடிக் கொண்டிருந்த போலி ஷெல் கம்பெனிகளைக் கண்டறிந்து அவர்களிடம் இருந்து திருடினார்…!
என்.ஜி.ஓ., என்ற பெயரில் வெளிநாட்டுப் பணத்தை பெருமளவில் வாங்கி முறைகேடு செய்தவர்களிடம் இருந்து திருடினார்…
நூறு நாள் வேலைத்திட்டம் என்ற பெயரில் நாட்டின் பணத்தைக் கொள்ளை அடித்துக் கொண்டு, உழைக்கும் மக்களிடம் முழுதாகச் சென்று சேர்க்காத இடைத்தரகர்களிடம் இருந்து பணத்தைத் திருடினார்…
பொதுமக்கள் பணத்தை, அரசு நிர்வாகப் பணத்தை முறைகேடாக எடுத்து அரசியல் செய்து கொண்டிருந்த எத்தனை எத்தனை அரசியல்வாதிகளின் திருட்டுத்தனத்துக்குப் பூட்டுப் போட்டு… அவர்களிடம் இருந்து திருடினார்…
ராகுல், சோனியா, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ரா என திருட்டுத்தனம் செய்து கொண்டவர்களிடம் இருந்து திருடி….
மானியம் என்ற பெயரில் வழங்கப் படுவதை எல்லாம் இடைத் தரகர்களாக திருடி வந்தவர்களிடம் இருந்து திருடி…
மக்கள் பணத்தை திருடிக் கொண்டிருந்த திருடர்களிடம் இருந்து திருடி…
அரசின் கஜானாவில்தான் சேர்த்துக் கொண்டிருக்கிறார் மோடி!
திருடர்கள் எல்லாம் இன்று ஒன்றுகூடி, மோடியைத் திருடர் என்று குய்யோ முறையோ என்று கத்திக் கொண்டிருக்கிறார்கள்! யோக்கியமானவர் எவரும் மோடியை வசைபாடுவதில்லை; திருடனும் கொள்ளைக்காரனும், பாதிக்கப்பட்டவனும் மட்டுமே வசை பாடுவதால்… மோடி ஒரு திருடர் மட்டுமல்ல…ராகுல் சொல்வது போல் பக்காத் திருடர்தான்!
சினிமாவில் வரும் கதாநாயகன் பெரும் கொள்ளைக்கார துரைமார்களிடம் இருந்து திருடி ஏழைகளுக்கு அள்ளிக் கொடுப்பது போல், மோடியும் இப்போது கேஸ் கனெக்சன், ஆதார் அட்டை மூலம் நேரடி முழு மானியம், விவசாயிகளுக்கான நேரடி பணம், வங்கிக் கணக்கு மூலம் இடைத்தரகரை ஒழித்தது, வீடுதோறும் மின் வசதி, வீடுகள் கட்டும் திட்டம் என ஏழைகளுக்கே இந்தக் கொள்ளைப் பணமெல்லாம் சேரும் போது, ஒரீஜினல் திருடர்களுக்குக் கோவம் வராதா என்ன?!