தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக., கூட்டணியில் ஓர் இடம் கொடுக்க அதிமுக., தலைமை முடிவு செய்துள்ளது. அதே நேரம், இரட்டை இலைச் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றும், சைக்கிள் சின்னத்தில் போட்டியிடக் கூடாது என்றும் விதிக்கப்பட்ட நிபந்தனையால் ஜி.கே.வாசன் அதிர்ச்சி அடைந்துள்ளார் என்கிறார்கள்!
அதிமுக பாஜக., கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையின் போதே, பாஜக., தம்முடன் உள்ள புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட மூவருக்கு தலா ஒரு தொகுதி கேட்டது. அப்போதும், பாஜக.,வுக்கு மட்டும் ஐந்து தொகுதிகள் என்றும், மற்றவர்களுக்கு ஒரு தொகுதி கொடுப்போம், ஆனால் அவர்கள் தாமரைச் சின்னத்தில் போட்டியிடக்கூடாது, மாறாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் கூறியதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் அதே சூத்திரத்தை தமாகா.,விடமும் விதித்ததால் அதன் தலைவர் ஜி.கே.வாசன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
2014ல் காங்கிரஸில் இருந்து விலகி த.மா.கா., வை தூசு தட்டி மீண்டும் தொடங்கி, 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தார் ஜி.கே.வாசன். ஆனால் அவர் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது பிடிக்காமல், முக்கியத் தலைவர்கள் எல்லாம் காங்கிரஸிலும் அதிமுக.விலும் இணைந்தனர். இதனால் கட்சி பெரிதும் கரைந்து போனது.,
சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விலகிய ஜி.கே.வாசன், தனித்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தமாகா இடம் பெற முயற்சி மேற்கொண்டார். ஆனால், தமாகாவை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என ராகுல் காந்தி உறுதியுடன் கூறி விட்டதால், வேறு வழியின்றி அதிமுக கூட்டணியில் இணைய முயற்சி மேற்கொண்டார்.
தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் வாசன் ரகசிய பேச்சு நடத்தினார். அப்போது 4 மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை இடமும் கேட்டுள்ளார். ஆனால், முதல்வர் பழனிசாமியோ, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால் வாசன் விரும்பும் ஒரு தொகுதியை தர தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த வாசன் அடுத்து என்ன செய்வது என்று கட்சியினருடன் ஆலோசித்து வருகிறார்.
[poll id=”8″]