தமிழகத்தில் இப்போது பலருக்கும் இருக்கும் கேள்வி, அதிமுக., பாமக., கூட்டணி எப்படி ஏற்பட்டது என்பதுதான்!
ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த போது, அன்புச் சகோதரி என்று சொல்லி கூட்டணி பேரத்தை நன்றாக மேற்கொண்டார் பாமக., நிறுவுனர் ராமதாஸ். அது போல், எது வெற்றி தரும் என்பதை உணர்ந்து அவ்வப்போது ராமதாஸ் கூட்டணி மாறுவதும் உண்டு. சில முறை திமுக.,வுடன் கூட்டணி வைத்தார்.
இருப்பினும், அண்மைக் காலமாக திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று சொல்லி வந்தார். வைக்கவும் மாட்டேன் என்று உறுதி கூறி வந்தார். தமிழகத்தில் வடக்குப் பகுதி, மேற்குப் பகுதியில் சில இடங்களில் மட்டுமே பாமக.,வுக்கு செல்வாக்கு உள்ளது. வன்னியர் சங்கமாகத் தொடங்கி பாமக.,வாக உரு மாறியதால், அது சாதிக் கட்சி என்ற அடையாளத்துடனேயே இன்று வரை பார்க்கப் படுகிறது.
இந்தச் சூழலில் திராவிடக் கட்சிகளின் கூட்டணி இன்றி, அல்லது பொதுவான அடையாளம் இன்றி பாமக., நிறுவுனர் ராமதாஸ் விரும்புவது போல், சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற அவர் கனவு சாத்தியமில்லாதது என்பது உலகறிந்த உண்மை.
இந்நிலையில் ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரு பெரும் அரசியல் சாணக்கியத்தனங்கள் மறைந்து போனதால், இடைவெளியினை இட்டு நிரப்ப நம்மால் முடியும் என்று கூறி, ஆளும் அதிமுக.,வை கடுமையாக எதிர்த்து வந்தார். இதனால் திமுக.,வினர் சற்றே மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில், திமுக.,வுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு, மீண்டும் அதிமுக.,பக்கமே சாய்ந்ததில், கடும் கோபத்திலும் ஆத்திரத்திலும் இருக்கிறார்கள் திமுக.,வினர்.
இதனால் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக பாமக.,வை விதவிதமாக வசைபாடி வருகின்றனர். சமூகத் தளங்களில் இந்தத் தாக்கம் அதிகம் என்றாலும், எதார்த்த நிலைமை வேறுதான்!
இந்நிலையில், கூட்டணி குறித்து விளக்க அறிக்கையை பாமக., கொடுத்திருந்த போதும், இன்னமும் சர்ச்சைகள் நீடிப்பதால், அனைவருக்கும் உள்ள சந்தேகங்களுக்கு விடை கூறுகின்றேன் என்று கூறியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
அதிமுக கூட்டணியில் இணைந்த பிறகு நேற்று சேலம் விமான நிலையம் வந்த அன்புமணி ராமதாசிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்க முயன்றனர். அதற்கு அவர் ”நீங்கள் என்ன கேட்க வறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். அ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்ந்தது முதற்கொண்டு அனைத்துக்கும் வரும் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கமாகப் பேசுகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றார்.
எனவே அன்புமணியின் இந்த விளக்கத்தைக் கேட்க, தமிழகம் திங்கள் கிழமை வரை காத்திருக்க வேண்டும்!