இரண்டாவது முறையாக திமுக., மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்துள்ளது. அதிமுக., கூட்டணியில் இணைய முடிவு செய்திருக்கிறார் விஜயகாந்த்! இந்நிலையில், தேமுதிக.,வுக்கு 5 தொகுதிகளும், 1 மாநிலங்களவை உறுப்பினர் தொகுதியும் வழங்க முடிவு செய்திருக்கிறது அதிமுக., தலைமை என்றும், அதனை விஜயகாந்த் தரப்பு ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு கூட்டணியும் அமைந்துள்ளது.
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதே நேரம் திமுக., கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக., விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.
அதிமுக., கூட்டணியில் தே.மு.தி.க, த.மா.கா. கட்சிகளை சேர்ப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதே நேரம், தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்க்க தி.மு.க.வும் முயன்றது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், 1 மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டதால் அதை விட கூடுதலாக 1 தொகுதி ஒதுக்கினால் கூட்டணியில் சேருவதாக விஜயகாந்த் தரப்பு நிபந்தனை விதித்தது. ஆனால் தேமுதிக.வுக்கு அவ்வளவு தொகுதிகளை ஒதுக்க முடியாது என்று அ.தி.மு.க. தரப்பு கண்டிப்புடன் கூறியது.
இதனிடையே, தே.மு.தி.க.வுக்கு 5 நாடாளுமன்ற தொகுதிகளும், 1 மாநிலங்களவை இடமும் தருவதாக அ.தி.மு.க. கூறி உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. கட்சிகள் இருப்பதால் ஓட்டு வங்கி அதிகம் என்றும், இந்தக் கூட்டணியில் இணைந்தால் வெற்றி நிச்சயம் என்றும் சுதீஷிடம் அ.திமு.க. மூத்த நிர்வாகிகள் பேசியுள்ளனர்.
தேமுதிக., தங்கள் கூட்டணியில் இருப்பதையே பாஜக.,வும் விரும்புகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பிரேமலதா விஜயகாந்த்தின் பிரசாரத்தை மோடி வெகுவாகப் பாராட்டினார். எனவே இந்த முறையும் தேமுதிக., தங்கள் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று மோடி வற்புறுத்தியதாகக் கூறப் படுகிறது. இதை அடுத்து தில்லியில் இருந்து வந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சுதீஷிடம் தனிப்பட்ட வகையில் பேசினார்.
இதை அடுத்து, அதிமுக. கூட்டணியில் இணைய விஜயகாந்த் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போது இக் கூட்டணியில் பாஜக.,வுக்கு 5 தொகுதிகளும், பாமக.,வுக்கு 7 தொகுதிகளும், புதுச்சேரி என்.ஆர். காங்கிரசுக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிக.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப் படும் பட்சத்தில் தமிழ் மாநில காங்கிரஸுக்கு ஒரு தொகுதி ஒதுக்கிவிட்டு, அதிமுக., 21 இடங்களில் போட்டியிடும் என்று கூறப் படுகிறது.
வரும் 3 ஆம் தேதி, அதிமுக., தேமுதிக., இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப் படுகிறது. இதை அடுத்து, சென்னையில் வரும் மார்ச் 6ம் தேதி மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேமுதிக.,வை தங்கள் கூட்டணியில் சேர்க்க திமுக தரப்பு கடும் முயற்சிகளை மேற்கொண்டது. தங்கள் தரப்பில் 3 தொகுதி தருவதாகவும், காங்கிரஸ் வசம் இருந்து 2 பெற்றுத் தருவதாகவும் பேசிப் பார்த்தது. ஆனால் பேச்சு சுமுகமாக நடைபெறவில்லை என்று கூறப் படுகிறது. இதனால் திமுக. தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
இது இந்தத் தேர்தலில் திமுக, தரப்புக்கு அமைந்த இரண்டாவது தோல்வி. பாமக.,வை அணியில் சேர்க்க முயற்சி மேற்கொண்டது. ஆனால், அது முடியாமல் போனது. இப்போது தேமுதிக.,வும் கைநழுவிப் போனதால் கடும் அதிருப்தியில் இருக்கும் திமுக., தற்போது விஜயகாந்துக்கு எதிராகவும் அவதூறுப் பிரசாரத்தை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகிறது.
கடந்த சட்டசபைத் தேர்தலின் போது, விஜயகாந்தை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க கருணாநிதி கடும் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், கடைசி நேரத்தில் பலன் கிடைக்காமல் கைநழுவிப் போனது. வைகோ.,வின் பெரும் முயற்சியில் தேமுதிக., மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து, அந்த வாக்குகள் திமுக.,வை தோல்வி அடையச்செய்ததால், மனம் உடைந்த கருணாநிதி அப்போது முதல் மௌனம் ஆகிவிட்டார்.
திமுக., ஆட்சிக் காலத்தில் மத்தியில் டி.ஆர்.பாலு கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சராக இருந்த நேரத்தில் தான், விஜயகாந்த்தின் கோயம்பேடு மண்டபம் இடிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து தீவிர அரசியல் களத்தில் குதித்த விஜயகாந்த், திமுக.,வை விரோதியாகவே பார்த்தார். ஆயினும் கருணாநிதியுடன் நட்புறவைப் பேணினார். அப்போதும் திமுக.,வுடன் கூட்டணி அமைக்கவில்லை. இப்போதும் அது தவிர்க்கப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.