சூரத்: ‘அபிநந்தன் தாய்நாட்டுக்கு விரைவில் திரும்ப பிரதமர் மோடியின் பலமே காரணம்’ என பாஜக., தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர்… முன்பெல்லாம் நமது ராணுவ வீரர்கள் எதிரி நாட்டிடம் சிக்கிக் கொண்டால் ஒன்று கொலை செய்யப்படுவார்கள்; இல்லையென்றால் அவமானப் படுத்தப் படுவார்கள். ஆனால் இன்று நிலைமையே வேறு.
நம் நாட்டு விமானப்படை வீரர், பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டு அந்நாட்டு ராணுவத்திடமே சிக்கிய போதும், அடுத்த 24 மணி நேரத்தில் தாயகம் திரும்புகிறார். இந்த மாற்றம் அனைத்துக்கும் பிரதமர் மோடியின் பலம் தான் காரணம்.
பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து மம்தா ஆதாரம் கேட்கிறார். அரசியல் ஆக்கப்படுவதாக ராகுல் கூறுகிறார். அகிலேஷ் விசாரணை நடத்த வேண்டும் என்கிறார். இத்தகைய கருத்துகளை கேட்டு பாகிஸ்தான் சிரிப்பதைக் காணும் போது நமக்கே அசிங்கமாக இருக்கிறது என்றார் அமித் ஷா.