தில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லையென காங்கிரஸ் அறிவித்ததுடன், தனித்துப் போட்டியிடப் போவதாகவும் கூறியுள்ளது.
தில்லியில் மொத்தம் 7 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. பாஜக., எதிர்ப்பு என்ற நிலையில் அண்மைக் காலங்களில் ஒன்றாகச் சேர்ந்திருந்த காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் 24 கட்சிகளின் மெகா கூட்டணியில் இருப்பதால்,. கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது.
ஆனால், காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று முதலில் துண்டித்தவர் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கேஜ்ரிவால். கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், காங்கிரஸுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கி விட்டு, 5 தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிடும் என்று கூறினார். ஆனால் பின்னர், ஆம் ஆத்மி வேட்பாளர்களாக 6 பேரை அறிவித்து, ஒரு தொகுதியில் பின்னர் வேட்பாளர் அறிவிக்கப் படுவார் என்று கூறி, தனித்துப் போட்டி என அறிவித்தார்.
அதே போல், கேஜ்ரிவாலால் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, ஆட்சியைவிட்டு அகற்றப்பட்ட ஷீலா தீட்சித் ஆம் ஆத்மியுடனான கூட்டணியை முற்றிலும் விரும்பவில்லை. இதனால், தில்லி காங்கிரஸார், ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தில்லி காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்துப் பேசினர். 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மாநில தலைவர்கள் கருத்தை ராகுல் ஏற்றுக் கொண்டாராம்.
இது குறித்து, ஷீலா தீட்சித் கூறுகையில் “ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை, இது இறுதியானது. முடிவை ராகுல் காந்தி ஏற்றுக் கொண்டார். காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும்,” என்றார்.
மோடி எதிர்ப்பு ஒன்றே லட்சியம் என மேடையில் ஒன்று சேர்ந்த கட்சிகள், தங்களுக்குள் ஒருமித்த ஆரோக்கியமான திட்டங்கள் இன்மையால், போட்டியிடுவதிலேயே தனித்து நிற்கத் தொடங்கி விட்டன.