நாளை பிரதமர் மோடி பங்கு பெறும் பொதுக்கூட்டம் சென்னை வண்டலூரில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பாமக.,வினருக்கு அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி அழைப்பு விடுத்துள்ளார்.
பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்: அதிமுக தலைமையில் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் வெற்றிக்கூட்டணி மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் ஆயத்தமாகி வருகிறது. அதன் ஒரு கட்டமாக, கூட்டணியில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் சென்னை அருகே நாளை நடைபெறவிருக்கிறது.
சென்னையை அடுத்த வண்டலூரில் நாளை பிற்பகல் 4:00 மணியளவில் நடைபெறவிருக்கும் இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமரும், தேசிய அளவிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவருமான நரேந்திர மோடி சிறப்புறையாற்றுகிறார்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருடன் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இந்தப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றக் கட்சிகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டில் அதிமுக, பாமக, பாஜக கூட்டணிக்கு ஆதரவான மக்கள் எழுச்சியை நிரூபிக்கும் வகையிலும், மக்களவைத் தேர்தலுக்கான பயணத்தின் நல்ல தொடக்கமாகவும் இந்தப் பொதுக்கூட்டம் அமைய வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் விரும்புகிறார்.
மேலும், பாமக வலிமையையும் பறை சாற்றும் வகையில் இந்தப் பொதுக்கூட்டத்தில் பாமகவை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருமளவில் திரண்டு வந்து பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு, பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பாமகவினர் வந்து சேர வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.