முடிவு எட்டப் படாத நிலையில், தேமுதிக மீண்டும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
விஜயகாந்த் தலைமையில் தேமுதிக மூத்த நிர்வாகிகள் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தினர். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இன்று முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப் படும் நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப் படுகிறது.
அதிமுக கூட்டணியில் இணைவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது. மேலும், இன்று மாலை அதிமுக கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெறும் நிலையில் விஜயகாந்த் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பாரா என்பது இந்தக் கூட்டத்தின் முடிவில் தெரியவரும்.
இந்நிலையில் எந்த தெளிவான முடிவையும் விஜயகாந்த் எடுக்காத நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தி வரும் அதிமுக., கூட்டத்தில், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கட்சி மூத்த நிர்வாகிகளும் பங்கேறுள்ளனர்.
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இடம்பெறச் செய்ய ஆலோசிப்பதாக தகவல் வெளியானது.