கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்கும் நிலையில், தேமுதிக., என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
அதிமுக., கூட்டணியில் கிடைக்கும் தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு போட்டியிட வேண்டிய தேவையில்லை என்று தேமுதிக., தொண்டர்கள் கருதுவதால், கூட்டணிப் பேச்சில் இருந்து பின்வாங்க விஜயகாந்த் முற்படுவதாகக் கூறப்படுகிறது. எனவேதான், பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்தில் கூட கலந்து கொள்ள இயலாமல் போய்விட்டது!
கூட்டணிக் கட்சியினர் பங்கேற்கும் மாநாட்டில் விஜயகாந்தும் இடம்பெறுவார் என்று கூறப் பட்ட நிலையில், அவரது படம் கூட்டணித் தலைவர்களின் படங்களுடன் வைக்கப் பட்டது. ஆனால், சற்று நேரத்தில் அது நீக்கப் பட்டது.
இந்நிலையில், அதிமுக உடனான தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏதோ தவறு உள்ளது என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
மேலும், எங்களிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவே தே.மு.தி.க நிர்வாகிகள் வந்தனர். ஆனால், எங்களிடம் கொடுக்க தொகுதி இல்லை என்று தெரிவித்தேன் என துரைமுருகன் கூறியுள்ளார்.
தேமுதிக தொண்டர்கள் விருப்பம் என என்னிடம் கூட்டணி பேச அக்கட்சி முக்கியஸ்தர்கள் இளங்கோவன் உள்ளிட்ட சிலர் வந்தனர், சுதீஷூம் தொலைபேசியில் பேசினார். எங்களிடம் சீட் எதுவும் இல்லை என கூறிவிட்டேன் எனக் கூறி, திமுக. பொருளாளர் துரைமுருகன் தேமுதிக.,வை அசிங்கப் படுத்தியுள்ளார்.
மேலும், தேமுதிக நிர்வாகிகள் சந்தித்தது குறித்து மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தீர்களா என்று செய்தியாளர்கள் கேடக்… அதற்கு துரைமுருகன் , தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். தூங்குகிறாராம். தொந்தரவு செய்யும் அளவுக்கு அவசியமில்லை என விட்டுவிட்டேன் என்று பதில் கூறினார். இதை விட தேமுதிக.,வை அசிங்கப் படுத்தும் வேறு எதுவும் இல்லைதான்! #DMK #DMDK
தேமுதிக எந்த கூட்டணியில் சேரும் என்று குழப்பம் நீடிக்கையில், திமுக பொருளாளர் துரைமுருகன் உடன் அவரது இல்லத்தில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. ஒருபுறம், பாஜக, அதிமுகவினரோடு சுதீஷ் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், திமுக பொருளாளர் துரைமுருகன் உடன் அவரது இல்லத்தில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினராம்.
முன்னதாக, விஜயகாந்த் வீட்டுக்குத் தேடிச் சென்று உடல் நலம் விசாரித்த திமுக., தலைவர் ஸ்டாலின், வெளியே செய்தியாளர்களிடம் பேசிய போது, நாங்கள் உடல் நலம் விசாரிக்கவே வந்தோம் என்றார். ஆனால்,பிரேமலதா பின்னர் கூறியபோது, அரசியல் பேசவே வந்தார்கள், கூடவே உடல் நலனும் விசாரித்தார்கள் என்றார். இது ஸ்டாலினை அசிங்கப் படுத்தியது. அதற்கு, இப்போது பதிலடி கொடுத்திருக்கிறது திமுக.,!