தேமுதிக., தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் திமுக., அக்கட்சிக்குக் கொடுத்த ‘மறைமுக’ செயல்திட்டம் என்று கூறுகின்றார்கள் தமிழக அரசியல் களத்தில்!
விஜயகாந்த்துக்கு ஒரு யோகம் உண்டு. தேமுதிக.,வினால் வாக்கு வங்கியைக் காட்டி ஒருவரை வெற்றி பெற வைப்பதை விட, வாக்குகளைப் பிரித்து, வெறும் நூறு இருநூறு வாக்குகள் வித்தியாசத்தில் கூட ஒருவரைத் தோல்வியுறச் செய்யலாம் என்பதுதான் அந்த யோகம்!
விஜயகாந்த் தங்கள் கூட்டணியில் இருந்தால் கிடைக்கும் லாபத்தை விட, அதிமுக., கூட்டணியில் இல்லாமல் இருந்தால் கிடைக்கும் லாபம் தங்களுக்கு அதிகம் என்பதை திமுக.,வினர் நன்றாக உணர்ந்துள்ளனர். அதனால், விஜயகாந்த்க்கு ஒரு டாஸ்ட் – வேலை கொடுத்துள்ளனர். அதன்படி, விஜயகாந்த் அதிமுக., கூட்டணியில் போட்டியிடாமல் தனித்து நிற்க வேண்டும்! தனித்து நின்று வாக்குகளைப் பிரித்து அதிமுக.,வை தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்பதுதான் !
தேமுதிக., தங்களுடன் கூட்டணி பேசியதை எந்த ஒரு சூழலிலும் ஒரு கட்சி நிச்சயமாக வெளியிடாது. கூட்டணி பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். கூட்டணிப் பேச்சு நடக்கிறது என்றெல்லாம் ஒரு நம்பிக்கைக்காகச் சொல்வார்களே தவிர, திமுக.,வின் துரைமுருகன் சொன்னது போல் எவரும் பட்டவர்த்தனமாக இப்படிச் சொன்னதில்லை.
அதன் மூலம், தேமுதிக.,வுக்கான வாய்ப்புகளை அதிமுக.,வில் குறைக்க வேண்டும் என்ற அரசியல் உள்நோக்கமும், கூடவே, இப்போதும் தேமுதிக., எங்களுடன் பேச்சு நடத்துகிறது, நடத்திக் கொண்டிருக்கிறது என்ற தகவலை வெளியுலகுக்குச் சொல்லி அதிமுக.,வில் இருந்தும் தேமுதிக.,வை கழற்றிவிடச் செய்ய வேண்டும் என்ற நோக்கமும் நன்றாக வெளித்தெரிகிறது.
தேமுதிக.,வில் கூட்டங்களை அதிகம் நடத்த வைத்து, கூட்டணி முடிவை எடுக்க விடாமல் ஒவ்வொரு கருத்துகளாக ஒவ்வொருவரை சொல்ல வைத்ததன் பின்னணியில் திமுக., இருந்தது என்று ரகசியமாகக் கிசுகிசுக்கிறார்கள். எந்த ஒரு கட்சித் தலைவனும் தொண்டர்களிடம் கருத்து கேட்டுவிட்டு, உறுதியான முடிவை தானே எடுப்பார். ஆனால் விஜயகாந்தோ, திமுக.,வுடன் கூட்டணியா.. சரி நீங்களே போயி பேசுங்க என்று கட்சிக் காரர்கள் இருவரை அனுப்பி வைத்துள்ளார். இதனை துரை முருகனும் வெளியில் கூறியுள்ளார்.
இப்போது, துரைமுருகன் ஒன்றுசொல்கிறார், ஸ்டாலின் ஒன்று சொல்கிறார். தேமுதிக.,வுடன் இன்னமும் பேசுகிறோம் என்று துரைமுருகன் சொல்ல… ஸ்டாலினோ திமுக., 20 தொகுதிகளில் போட்டியிடப் போவது உறுதி என்று கூறுகிறார். அவருக்கு, தங்கள் கட்சியினரே எதுவும் விபரீதமான முடிவு எடுத்துவிடக் கூடாது என்ற அச்சம்!
ஒருபுறம் அமமுக., டிடிவி தினகரன் மூலம் அதிமுக., ஓட்டுகளைப் பிரிக்க ஏற்பாடு செய்துவிட்ட திமுக., தரப்பு, தற்போது விஜயகாந்த்தையும் கழற்றிவிட்டு, தனியாக நிற்க வைத்து வாக்குகளைப் பிரிக்க வைக்க திட்டமிடுகிறது. இதன் மூலம் பலம் வாய்ந்த கூட்டணியாக திமுக.,வைக் காட்டும் செயல்திட்டம் மக்களிடம் எடுபடவேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது.