திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் விருதுநகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் காமராஜர் புகழ் பாடி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை விமர்சனம் செய்திருக்கிறார் .
பெருந்தலைவர் காமராசர் எளிமையான வாழ்க்கைக்கு சொந்தக்காரர். இரண்டு வேட்டி சட்டையோடு இருந்தவர். ஆனால் பாரத பிரதமர் அவர்களோ லட்சக்கணக்கான ரூபாயில் உடை அணிகிறார். ஏழை எளிய மாணவர்கள் படிக்க பள்ளிக்கூடம் திறந்தவர் காமராஜர். ஆனால் எளிய பிள்ளைகள் முன்னேறக் கூடாது என்று நீட் கொண்டு வந்தார் மோடி என்று வழக்கம் போல வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பது போல பேசி இருக்கிறார்.
பழமொழிகளின் தந்தை ஸ்டாலினின் தந்தையார் கருணாநிதி பெருந்தலைவர் காமராஜர் அண்டங் காக்கை, எருமை தோல்காரன், மரம் ஏறி ….. இப்படி எல்லாம் பேசினாரே! ஏழைப்பங்காளன் வீட்டைப் பார் என்று காமராஜர் பற்றி பேசியது நினைவு இல்லையா?
காமராஜர் பள்ளிக்கூடங்கள் திறந்து படிக்கக் கற்றுக் கொடுத்தார். ஸ்டாலினின் தந்தையோ தமிழர்களை தமிழக மக்களை குடிப்பதற்கு குடி கூடங்கள் – திறந்து சாதனை படைத்தார்! பாக்கெட் சாராயம் விற்று பாட்டில் சாராயம் விற்க அரசு சாராய வியாபாரத்தை அகிலத்திற்கு அறிமுகப்படுத்திய பரிணாம நாயகர் தானே உங்களது தந்தையார்! இது உங்களுக்கு மறந்துவிட்டதா… இல்லை துண்டுச் சீட்டில் எழுதியவர்கள் கொடுக்க மறந்து விட்டார்களா?
பெருந்தலைவர் 2 செட் வேட்டி சட்டையோடு இருந்தார் என மேடையில் முழங்கி விட்டு தினசரி தொண்டர்களிடம் வேட்டி பிச்சை எடுப்பது ஏன்?
பண்டாரம் பரதேசிகள் என்று பாஜகவை வசை பாடினாலும் கூட்டணியில் அங்கம் வகித்து அரசு சுகம் அனுபவித்த போது உங்களுக்கு தெரியவில்லையா பாஜக மதவாதக் கட்சி என்று?
கொள்கை முரண் இருந்தாலும் உங்கள் கோபாலபுரம் இல்லம் தேடி வந்து கருணாநிதியின் உடல் நலம் விசாரித்து, ஓய்வு எடுக்க என் வீட்டிற்கு வாருங்கள் என்று உள்ளன்போடு அழைத்த உத்தமத் தலைவர் பாரத பிரதமர் மோடி அவர்களை விமர்சனம் செய்ய உங்களுக்கு எப்படி மனம் வருகிறது?
பெருந்தலைவர் காமராஜரைப் போல பெற்ற தாயை தன் வீட்டில் வைத்துக் கொள்ளாமல் இன்றளவும் நாட்டு நலன் தான் முக்கியம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் வாழும் காமராஜர் ஐயா நரேந்திர மோடி அவர்களை நாகரீகமற்ற முறையில் நீங்கள் விமர்சனம் செய்வதைப் பார்த்து எதை வைத்து சிரிப்பது என்று தெரியவில்லை .
குடிவேண்டாம் என்று சொன்ன காமராஜரை நீங்கள் மதிப்பீர்களேயானால் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் பங்கு வகித்து தொழில் நடத்தும் சாராய உற்பத்திக் கூடங்களை மூடுகிறேன்! இது பெருந்தலைவர் காமராஜர் மீது சத்தியம் என்று கூறுவதற்கு உங்களுக்கு தைரியம் உண்டா?
காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் உண்ணாவிரத நாடகங்களை சென்னை மெரினா கடற்கரையில் போட்ட கலைமாமணி நாடகக் கலைஞரின் மகனான தங்களைக் கேட்கிறேன்…
இலங்கையிலே லட்சக்கணக்கான தமிழர்களை கொத்துக் குண்டுகள் போட்டு கொலை செய்த இன அழிப்புக் காரணமான சோனியாவும் கூட்டணி வைத்து தமிழர் நலன் பேசுவது என்பது கசாப்புக் கடைக்காரன் காருண்யம் பேசுவது போல இருக்கிறது.
மோடி 15 லட்சம் ரூபாய் ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் செலுத்துவார் என்று தவறான கருத்து பிரச்சாரம் செய்யும் ஸ்டாலினே… உங்களது தந்தையார் அனைவருக்கும் இரண்டு ஏக்கர் இடம் கொடுப்போம் என்று சொன்னாரே! கொடுத்த இடங்களைத்தான் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம்… இரண்டு ஏக்கர் அல்ல… இரண்டு சென்ட் நிலம் கூட எங்களைப் போன்றவர்களுக்குக் கொடுக்க வில்லை! நீங்கள் பாரத பிரதமர் அவர்களை பற்றி பேசுவதற்கு வெட்கமாக இல்லை?
[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”1937″ order=”desc”]
பெருந்தலைவர் காமராசர் ஓட்டுக்காக மசூதி எங்கும் சென்று குல்லா அணிந்து நோன்புக் கஞ்சி குடித்தாரா? கிறிஸ்தவ சபைகளுக்கு சென்று கிறிஸ்துமஸ் கேக் வாங்கி சாப்பிட்டாரா ? இல்லை ஹிந்துக் கோவில்களில் வைத்த பொட்டினை அழித்தார் என்று
ஒரு சம்பவம் கூற முடியுமா?
பெருந் தலைவர் காமராஜர் உண்மையிலேயே பெருந்தலைவராக இருந்தார் .
தாங்களோ “பெறும்” தலைவராக இருக்கிறீர்களே.
விவசாயம் செழிக்க விவசாயம் காக்க அணைகளை கட்டியவர் காமராஜர்! ஆனால் விவசாய நிலங்களை பங்கு போட்டு விற்பனை செய்ய, நெல் நட்ட வயல்கள் எல்லாம்
கல் நட்டு விற்பனை செய்த, பாறைகளை உடைத்து ஆற்றுமணல் கொள்ளை அடித்து கனிமக் கொள்ளை அடித்த ஏதாவது ஒரு வழக்கு பெருந்தலைவர் காமராசர் மீது உண்டா?
அவர் பெயரை உச்சரிப்பதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?
பல அரசு திட்டங்கள் மக்களுக்காக நிறைவேற்றிய போதும் ஏதாவது ஒரு ஊழல் வழக்கில் வழக்கு மன்றம் வந்ததாகவோ, சிறைக்கு சென்றதாகவோ ஒரு வழக்கை ஸ்டாலினே… பெருந்தலைவர் மீது கூறமுடியுமா?
இவர் பெயரை உச்சரிப்பதற்கு ஒரு தகுதி வேண்டாமா உங்களுக்கு…?
அனைவரும் கல்வி படிக்க பள்ளிக்கூடம் திறந்த காமராசர் எங்கே? கல்விக் கட்டண கொள்ளை அடித்து எளிய பிள்ளைகள் உள்ளே நுழைய _ தமிழ் மொழி பேச அனுமதி மறுக்கும் பள்ளிக்கூடம் நடத்தும் மருமகனை தன்னுடன் வைத்துள்ள ஸ்டாலின் எங்கே?
பெருந்தலைவர் பெயரைச் சொல்ல உங்களுக்கு யோக்கியதை உண்டா ?
அருகதை உண்டா?
இதுபோன்ற ஆயிரக்கணக்கான கேள்விகளை எங்களால் எழுப்ப முடியும்! பதில் சொல்வதற்கு தங்களால் முடியாது. காரணம் தூங்குபவனை எழுப்பலாம் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது.
இந்த பழமொழி தங்களுக்கும் பொருந்தும்..
அரசியல் பதவி சுகத்துக்காக மாற்றி மாற்றி கூட்டணி அமைத்து தமிழர்களையும் தமிழக மக்களையும் ஏமாற்றி வரும் கேடுகெட்ட அரசியல் நாகரிகத்தை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திய திராவிட கட்சிகளின் வாரிசு தானே நீங்கள்!
உங்களுக்கு நாகரீகம் வராது! ஆனால் நாகரீகமாக பேசக் கற்றுக் கொள்ளுங்கள்! அவசரக் கோலத்தில் வார்த்தைகளை அள்ளித் தெளிக்க வேண்டாம்!
தாங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் விலை கொடுக்க கூடிய காலம் இதோ அருகில் வந்துவிட்டது!
- இந்து தேசியவாதி இராம. இரவிக்குமார்