ஜெயலலிதா என்கிற அம்மா இல்லாத நிலையில் எங்களுக்கு பிரதமர் மோடிதான் தற்போது ‘டாடி’யாக இருந்து வழி நடத்துகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது இப்போது பேசுபொருள் ஆகியிருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் எல்லோரும் பாதுகாப்பாக உள்ளனர். அதே போல், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்திய அளவில் எல்லோரும் பாதுகாப்புடன் இருக்கிறார்கள்.
ஜெயலலிதா எனும் ஆளுமை கொண்ட அம்மா இல்லாமல் நாங்கள் தவித்து வருகிற இந்த நேரத்தில், பிரதமர் மோடிதான் எங்களுக்கு ‘டாடி’யாக இருந்து வழிகாட்டுகிறார்.
இந்தியாவை மோடியே மீண்டும் ஆள வேண்டும். அதேபோல், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடர வேண்டும்… – என்று கூறினார் ராஜேந்திர பாலாஜி!