மக்கள்நலக் கூட்டணியில் வைகோவால் நாங்கள் அடைந்த பாதிப்பை இப்போது திமுக.,வும் அடையும் என்று விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் சாபம் இட்டுள்ளார்.
நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்….
மக்கள் நலக் கூட்டணியில் இருந்துகொண்டு, தேமுதிக.,வால் ஒரு தொகுதி கூட வெற்றி பெற முடியவில்லை.
அதற்கு அதிமுக, திமுகவிற்கு மாற்றாக முதல்வராக முன்னிறுத்தப்பட்ட கேப்டன் அமைத்த மக்கள் நலக் கூட்டணியில் சில கட்சிகளின் தவறான நடவடிக்கைகளே காரணம்.
வைகோவின் தவறான அறிக்கைகள், அவர் கோவில்பட்டியில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றது போன்ற நடவடிக்கைகள் தவறாக அமைந்தன.
இதே நடவடிக்கைகளை ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியிலும் வைகோ செயல்படுத்தி அக்கூட்டணியை தோல்வியுறச் செய்த பிறகே வெளியே வருவார். நாங்கள் மக்கள் நலக் கூட்டணியில் அடைந்த பாதிப்பை இனி திமுகவும் வைகோவால் பெறும்… என்று கூறியுள்ளார்.
2011-ல் உங்களுடன் கூட்டணி வைத்ததற்காக சட்டப் பேரவையில் வருந்திய ஜெயலலிதா கட்சியுடன் மீண்டும் கூட்டணி வைத்துள்ளீர்களே என்ற கேள்விக்கு…
அவரது கருத்து சட்டப்பேரவை தேர்தலுக்கானது. இது மக்களவை தேர்தல் என்பதால் இதில் பொருத்திப் பார்க்கக் கூடாது. கடந்தகால அரசியலை பார்த்தால், திமுகவை எதிர்த்து எவ்வளவோ பேசிய வைகோ அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். எனவே இந்தத் தேர்தலில் அனைவரும் இணைந்தால் தான் மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியும். எங்கள் தொண்டர்களுக்கு ஏற்கெனவே பழக்கமானதுடன் எங்கள் கட்சிக்கும் பொருந்துகிறது என்பதால் அதிமுக தலைமையிலான கூட்டணியில் சேர்ந்தோம் .. என்று கூறியுள்ளார்..
கடந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து நீங்கள் வெளியேறியது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள எல்.கே.சுதிஷ்,
2016-ல் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க வேண்டி இருந்ததால் பாஜகவை விட்டு விலகினோம். என்றாலும் அவர்கள் எங்களுக்கு அளித்த மதிப்பு தொடர்ந்தது. தற்போது மீண்டும் மக்களவை தேர்தலில் அவர்களுடன் இணைந்துள்ளோம்… என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2019 மக்களவை தேர்தலில் பாஜகவுடன் சேர்வதாக நாங்கள் தான் முதல் கட்சியாக கூட்டணி அறிவிப்பு வெளியிட்டோம். இதன்பிறகு கூட்டணி குறித்து இதற்கிடையில் எங்களுக்கு முன்பாக பாமக நேரடியாக அதிமுகவுடன் கூட்டணி பேசியதால் அதிக தொகுதிகள் பெற்றது.
2014-ல் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் 6 கட்சிகள் இடையே ஒரே நாளில் ஒப்பந்தம் ஏற்பட்டது போல் தற்போது நடந்திருந்தால் அனைத்து கட்சிகளுக்கும் சரிசமமாக தொகுதிகள் கிடைத்திருக்கும்.
தற்போதைய கூட்டணிக்கு அதிமுக தலைமை ஏற்றதே இதற்குக் காரணம். பாஜக தலைமை ஏற்றிருந்தால் இந்தக் கேள்வியே எழுந்திருக்காது.
எனினும், வெற்றிக்கு பிறகு பாஜக தலைமையில் அமையும் ஆட்சியில் எங்கள் கட்சிக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும்.. என்று கூறியுள்ளார் எல்.கே.சுதிஷ்.