சிவகங்கையில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் குறித்து அறிவிக்க பட்டுள்ளது. இன்று மாலை இதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டது.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் 10 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டது. இதில், சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகளில், 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப் பட்டது. ஆனால் சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் அறிவிக்கப் படவில்லை. இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை தொகுதியில் போட்டியிட தனது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு வாய்ப்பு கேட்டு ப.சிதம்பரம் உறுதியாக இருந்ததாகவும், ஆனால் கார்த்தி மீதுள்ள வழக்குகளை சுட்டிக் காட்டி அது தேர்தலில் பாதகமாக அமையும் என்று காங்கிரஸ் தலைவர்கள் சொன்னதாகவும் கூறப் படுகிறது.
ஆனால் அதற்கு சிதம்பரம், தனது மகனுக்கே அங்கு வாய்ப்பு கொடுக்கப் பட வேண்டும் என்று உறுதியாக இருந்தார் என்றும், கட்சித் தலைவர் ராகுல் மீதே வழக்குகள் உள்ளதாகவும், அவர் பிணையில் வெளியில் உள்ள நபர் என்றும், எனவே தனது மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவதில் தவறு ஒன்றும் இல்லை என்றும், வெற்றி பெறும் பட்சத்தில் அது அவருக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றும் ப.சிதம்பரம் உறுதிபடத் தெரிவித்தார் என்றும் கூறப் படுகிறது.
9 தொகுதி வேட்பாளர்கள் குறித்து அறிவிக்கப் படுவதற்கு முன்னர், தில்லியில் உள்ள சிதம்பரம் வீட்டில்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, தொகுதியில் அடிமட்டத் தொண்டர்களுடன் தொடர்பில் இருப்பவரும், தொகுதிக்கு பல காலமாக சில நன்மைகளைச் செய்து வருபவருமான சுதர்சன நாச்சியப்பன் நின்றால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றும், கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு மிகக் குறைவு என்றும் சிலர் கருத்து தெரிவித்தனராம்.
இந்நிலையில், சிவகங்கை தொகுதியில் பாஜக., சார்பில் போட்டியிடும் ஹெச்.ராஜாவுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளதாக பாஜக.,வினர் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.