அமமுக., கட்சிக்கு நிரந்தரமாக குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு தேர்தல் பணிகளில் மும்முரமாக உள்ளார் டிடிவி தினகரன். இருப்பினும் அவரது கட்சியினருக்கு பொதுச் சின்னம் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்தது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிட்டபோது, தேர்தல் ஆணையம் அவருக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கியது. அதை வைத்து வெற்றி பெற்றார் தினகரன். எனவே, அந்த சின்னத்தையே தனது கட்சிக்கு பொது சின்னமாக ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் தினகரன்.
இது தொடர்பில், உயர் நீதிமன்றம் ஏற்கெனவே கைவிரித்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் தினகரன். அவரது மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் கூறியது.
பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு மட்டும்தான் பொது சின்னம் கொடுக்க முடியும். அமமுக பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் குக்கர் சின்னத்தை பொது சின்னமாக கொடுக்க முடியாது, என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த வாதத்துக்கு தனது அதிருப்தியை தெரிவித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.
#TTVDhinakaran #AMMK #ElectionCommission #PressureCooker