அவதூறு கிளப்பி பேசி வரும் திமுக., தலைவர் ஸ்டாலினுக்கு பாமக., நிறுவுனர் ராமதாஸ் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பா.ம.க. வெளியிட்ட செய்திக் குறிப்பில், வன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்து அவதூறு பிரசாரம் செய்து வரும் மு.க.ஸ்டாலினுக்கு பாமக., நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தின் போது, “வன்னியர் சங்க கல்வி அறக்கட்டளையின் பல்வேறு சொத்துகளை எல்லாம் தனது குடும்ப சொத்துகளாக ராமதாஸ் மாற்றிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக திருச்செந்தூர், தென்காசி, குற்றாலம், சிதம்பரம், சென்னையில் இருக்கும் வன்னியர் சொத்துக்கள் அனைத்தும் ராமதாஸின் துணைவியார் பெயரில் உள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் முதல்வரிடம் உள்ளது. தமிழக அரசு நினைத்தால் அவற்றை கைப்பற்ற முடியும். இதில் இருந்து சொத்துகளை காப்பாற்றவே அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளார் ராமதாஸ். அவர் தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ள எதையும் செய்யக்கூடியவர்.” என்று பேசியிருந்தார்.
இதை அடுத்து, அவரது பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார் ராமதாஸ். இந்நிலையில் வழக்கறிஞர் நோட்டீஸ் இன்று அனுப்பப் பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பாமக வெளியிட்ட அறிக்கையில்…
வன்னியர் கல்வி அறக்கட்டளை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள வன்னியர் சொத்துகளை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அவரது துணைவியார் பெயரில் மாற்றி விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இது தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறி அவருக்கு வழக்கறிஞர் க.பாலு மூலமாக வழக்கறிஞர் அறிவிக்கையை அனுப்பியுள்ளார்… என்று குறிப்பிடப் பட்டுள்ளது.