தற்போது பொங்கல் 2020க்கு திட்டமிடப்பட்டுள்ள படத்தை அடுத்து, கே.எஸ்.ரவிக்குமார் கதையில் ரஜினி அடுத்த படத்துக்கு தயாராகி வருகிறார்.
ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமர் இன்று சந்தித்துப் பேசினார். இதை அடுத்து, ரஜினியின் அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப் படுகிறது.
ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கே எஸ் ரவிக்குமார், ரஜினியின் போயஸ் தோட்ட வீட்டில் சந்தித்துப் பேசினார். சுமார் 1 மணி நேரம் நடந்த சந்திப்பில் ரஜினிக்காக உருவாக்கிய கதையை ரஜினியிடம் அவர் கூறியதாக கூறப்படுகிறது.
கே.எஸ்.ரவிக்குமார் முன்னர் படையப்பா, முத்து ஆகிய படங்களை ரஜினியை வைத்து இயக்கியுள்ளார். இரண்டுமே நல்ல வரவேற்பைப் பெற்ற படங்கள். குறிப்பாக, முத்து படத்தில் கே.எஸ்.ரவிக்குமாரே நேரில் தோன்றும் காட்சி பெரும் கலகலப்பை ஏற்படுத்திய ஒன்று!
இந்நிலையில் தர்பார் படம் முடிந்த பின்னர் மீண்டும் கே எஸ் ரவிக்குமார், ரஜினி கூட்டணியில் தலைவர் 168 படம் உருவாகும் என கூறப்படுகிறது. கே.எஸ்.ரவிக்குமாரைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசியுள்ளதாகக் கூறப் படுகிறது.