தூத்துக்குடி: முதலமைச்சராக அல்ல.. ஒர் அமைச்சராகவே இருக்க தகுதியற்றவர் எடப்பாடி பழனிசாமி என்றும், ஸ்டாலினை விமர்சிக்க பழனிசாமிக்கு தகுதியில்லை என்றும், ஸ்டாலினின் தங்கை கனிமொழி தேர்தல் பிரசாரத்தில் கோபமாகப் பேசினார்.
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இப்போது சூடுபிடித்துள்ளது. இதற்காக முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்டவர்கள் அதிமுக., தரப்புக்காகவும், ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் திமுக.,வுக்காகவும் போட்டி போட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். அப்போது இரு தரப்பும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனமும் செய்து வருகின்றனர்.
இதனிடையே, மே 23 ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளுக்கு பின், ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது; தோல்வி பயத்தால் தேர்தல் ஆணைய நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி…
முதல்வராக அல்ல, அமைச்சராகக் கூட கனவு காண முடியாதவரையே முதல்வராக நாம் கொண்டுள்ளோம்! திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை! விரைவில் ஸ்டாலின் முதல்வராவார்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. நாடு தழுவிய அளவில் தேர்தல் ஆணையம் மீது தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தங்க தமிழ்ச்செல்வன் மூலம் திமுக – அமமுக கூட்டு வெட்ட வெளிச்சமாகி உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். திமுகவிற்கு யாருடனும் மறைமுகமாக கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார் கனிமொழி!
மாநிலங்களவை எம்.பி.,யாக இருந்து கொண்டே கோடிக்கணக்கில் சுருட்டியவர் கனிமொழி, அவர் எடப்பாடியின் தகுதியைப் பற்றிப் பேச வேண்டியதுதான்…! என்று கனிமொழியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசனஸ் தங்களது குழுக்களில் கலாய்த்து வருகின்றனர்.