அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யச் சென்ற கமல்ஹாசன், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பள்ளப்பட்டியில் பேசிய போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவர் பெயர் கோட்சே என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
தாம் பேசிக் கொண்டிருப்பது இஸ்லாமியர்கள் மத்தியில் என்பது தெரிந்தும், வேண்டுமென்றே, தாம் இஸ்லாமியர்கள் மத்தியில் நின்றுகொண்டு பேசுவதால் அவ்வாறு கூறவில்லை, காந்தி சிலைக்கு எதிரே நின்று கொண்டிருப்பதால் இவ்வாறு கூறுவதாகவும் பேசினார்.
இந்நிலையில், அவரது கருத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
அதில், இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கமல் பேசி வருவதாகவும், அவரது கட்சிக்கு தடை விதிப்பதுடன், வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
கரூரிலும் இந்து முன்னணியினர், தேர்தல் நடத்தும் அதிகாரியை சந்தித்து, கமல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.