தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், பிரதமர் மோடி கூறியது போல், இந்துக்கள் எவரும் தீவிரவாதியாக இருக்க முடியாது. தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது. ஆனால், கமல்ஹாசனை யாரோ பின்னிருந்து இயக்குகிறார்கள்… என்று கூறினார்.
இந்நிலையில், இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், செய்தியாளர்களிடம் பேசிய போது, நாதுராம் கோட்சே பற்றி கமல் கூறிய கருத்துக்கள் வரலாற்று உண்மைதான் என்றும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான் வகிக்கும் உயர்ந்த பதவியை மறந்து பேசுவது சரியல்ல என்றும் கூறினார்.
இதே போன்ற கருத்தை, அதே நேரத்தில் மதுரையில் நடிகர் கமல்ஹாசனும் தெரிவித்தார்.
அநீதி எங்கு நடந்தாலும் அதை தட்டிக்கேட்பேன்… என்றும், கோட்ஸே குறித்த எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கமல்ஹாசன் கூறினார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியது சரித்திர உண்மை என்று, சர்ச்சை பேச்சுக்குப் பிறகு திருப்பரங்குன்றம் தொகுதியில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்ட போது மீண்டும் கூறினார்.
எனது பேச்சை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை, நான் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை! யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசுவதில்லை ; ஆனால் சரித்திர உண்மையை பேசினால் புண்ணாகும் என்றால் அதை ஆற்ற வேண்டும்! உண்மை கொஞ்சம் கசக்கும். ஆனால் கசப்பு மருந்தாகும்!
மதச் செருக்கு, சாதிச் செருக்கு எல்லாம் நிற்காது; நான் சொன்னது சரித்திர உண்மை; இந்த அரசு வீழும். வீழ்த்தப்பட வேண்டும். வீழ்த்துவோம் என்று பேசினார் கமல்ஹாசன்.
கமல்ஹாசன் கூறிய அதே கருத்தை ஒரே கால நேர இடைவெளியில் அரசியல் மட்டத்தில் சிலரும் பேசியிருப்பது, கமல், திருமாவளவன், வைகோ உள்ளிட்டவர்களை பின்னிருந்து இயக்கும் சக்தி ஒன்றே ஒன்றுதான்! அதன் செயல்திட்டத்தின் படியே அனைவரும் ஒரே பேச்சைப் பேசி வருகின்றார்கள் என்பது, தமிழிசை சொன்னபடியே தெரியவருகிறது என்று சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.