சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளரை ஆதரித்து கமலஹாசன் பேசினார், அரவக்குறிச்சியில் மே 16/05/2019 இல். அது இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்குமிடம் என்பதையும் அங்கே ஜமாத் வைத்தது தான் சட்டம் என்பதையும் குறித்துக்கொள்ள வேண்டும்.
ஊடகங்களின் உதவியால் இது நாடு முழுவதும் பரப்பப்பட்டது. இப்போது அது ஏற்படுத்திய விளைவிலிருந்து தப்பிக்கப் பார்க்கும் கமலஹாசன், தன்னுடைய முழுப் பேச்சையும் ஒளிபரப்பவில்லை ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு பிரச்சினை செய்கிறார்கள், அதாவது “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஹிந்து”. “நான் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் என்பதும் ஊடகங்களின் கவனத்திற்கு வந்திருக்கிறது. மற்ற விஷயங்களை ஒதுக்கிவிட்டார்கள்” என்கிறது அவருடைய அறிக்கை.
ஹிந்து இயக்கங்களால் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. காவல் நிலையங்களில் புகார் பதிவு செய்யப்பட்டது.
சமாளிப்பாக சரித்திர உண்மையைத் தான் பேசினேன் என்றார் கமல்!
சரித்திரத்தை சுட்டிக் காட்டிப் பேசும் கமல்ஹாசனுக்கு சில சரித்திர உண்மைகளை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. பெரும்பாலும் இவை எல்லாம் அவரால் பெரியார் என்றழைக்கப்படும் ஈவேரா பற்றித்தான்!
1944- நீதிக்கட்சியின் பேரை தமிழர் கழகம் என்று மாற்ற ஒரு முயற்சி நடந்தது, சேலத்தில்! அதை முன்னெடுத்தவர்கள் கீஆபெ.விசுவநாதன், அண்ணல் தங்கோ, சௌந்தர பாண்டியன் போன்றவர்கள்! ஆனால் அந்த கட்சியில் தமிழர் குரலுக்கு மவுசு இல்லை. ஈவேரா.,வின் அடாவடி வென்றது.
நீதிக்கட்சி, திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் பெற்றது!
இந்த சரித்திர உண்மை கமலஹாசனின் கவனத்திற்கு வந்து இருக்கிறதா?
1961 – மதுரை திருப்பரங்குன்றத்தில் ஜூலை 13/16 தேதிகளில் சி.என்.அண்ணாதுரை தலைமையில் திமுக மாநாடு நடந்தது! அந்த மாநாட்டில் பேசிய கருணாநிதி, “நமது தேசிய இன எழுச்சி லட்சியம் யார் கைக்கு வந்து சேர வேண்டுமோ அவர் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது ; இடையில் பெரியார் சிறிது வந்தார் போனார்” என்றார்
ஈவேரா.,வுக்கு முக்கியத்துவம் தர தேவையில்லை என்பது தான் இதன் பொருள்! இந்த சரித்திர உண்மையை கமலஹாசன் கேள்விப்பட்டிருக்கிறாரா?
1965 இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆங்கிலம் நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு தமிழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதன் பின்புலத்தில் திமுக இருந்தது. தமிழகமே உணர்ச்சிக் கொந்தளிப்பில் மூழ்கியது. இதை அடுத்து வந்த தேர்தலில் (1967) காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது!
எந்தக் காலத்திலும் மக்கள் உணர்ச்சிக்கு மதிப்புக் கொடுக்காதவர் ஈவேரா.,! இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் போது ஈவேரா சொன்னது இது தான்… “எதற்காக சட்டம்? எதற்காக போலீஸ்? எதற்காக போலீஸ் கையில் தடி? துப்பாக்கி எதற்கு? முத்தம் கொடுக்கவா கொடுத்துள்ளார்கள்? இது என்ன அரசாங்கம்? வெங்காய அரசாங்கம்!” (1965 மே 28/30)
போலீஸ் கையில் துப்பாக்கி இருப்பது பொதுமக்களை சுடுவதற்கு தான் என்று சொன்னவர் ஈவேரா.,! இந்த சரித்திர உண்மை கமலஹாசனின் பார்வைக்கு வந்திருக்கிறதா?
தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தால் தலித்துகள் ஏமாற்றப் பட்டிருக்கிறார்கள் என்று மண்டல் கமிஷன் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது! இந்த சரித்திர உண்மையை கமலஹாசன் படித்திருக்கிறாரா?
1969 – கீழ்வெண்மணியில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த 42 விவசாயத் தொழிலாளர்கள் பண்ணையாரால் எரித்துக் கொல்லப்பட்ட போது இது கம்யூனிஸ்ட் கட்சியின் அராஜகம் என்று அறிக்கையை வெளியிட்டார் ஈவேரா.,! (விடுதலை 20.1.1969)
இந்த சரித்திர உண்மைகள் எல்லாம் கமலஹாசனின் கருத்தாக்கத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதை அவர் வெளிப்படையாக சொன்னால், மகாத்மாவின் கொள்ளுப் பேரன் என்ற போஸ்டுக்கு மனு போட அவருக்கு யோக்கியதை இருக்கும்!
இல்லையென்றால் கனடாவின் டொரன்டோ விமான நிலையத்தில் விசாரிக்கப்பட்டபோது “நான் முஸ்லிம் இல்லை; நான் ஹிந்து தான்” என்று கமலஹாசன் கதறியது போன்ற சரித்திர உண்மைகளை நாம் தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டி இருக்கும்!
காலாவதியாகிவிட்ட சரித்திர உண்மைகளை தோண்டி எடுத்து பேசுகிற கமலஹாசன் கண்முன்னே நடக்கின்ற சரித்திர உண்மையை கவனிக்க தவறிவிட்டார்!
அரவக்குறிச்சியில் இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதியில் ஹிந்துக்களை இழிவுபடுத்தி அவர் பேசும்போது அங்கிருந்தவர்கள் கை தட்டவில்லை என்பதை பதிவு செய்கிறது நியூஸ்7 தொலைக்காட்சி.
இதுதான் அவருடைய அராஜக கருத்தியலுக்கான சாவுமணி!
கட்டுரை: சுப்பு