கரூர்: அரவக்குறிச்சி, இப்போது ஆர்.கே.நகர் ஆகிவிட்டதாக புகார் கூறியிருக்கிறார்கள். ஆர்.கே.நகரில் ரூ. 20 டோக்கன் வேலை செய்தது. இங்கே ரூ. 2 ஆயிரம் ஜெராக்ஸ் நோட்டை அதற்காக களம் இறக்கியிருக்கிறார்கள். அதனால்தான் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார் செந்தில் பாலாஜி என்று குற்றம் சாட்டுகின்றனர் அதிமுக.,வினர்.
ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டை கொடுத்து திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மக்களை ஏமாற்றுவதாக அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் இன்று அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன், வாக்குப்பதிவு நடந்து வரும் பள்ளப்பட்டி வாக்குச்சாவடியை இன்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, வாக்காளர்களை வாக்களிக்கவிடாமல் தடுக்கிறார். மேலும் வாக்களிக்க வரும் மக்களிடம் வாக்களித்து விட்டு வாருங்கள், உங்களுக்கு ரூ.2 ஆயிரம் தருகிறேன் என்று சொல்கிறார். தொடர்ந்து மக்களை ஏமாற்றுவதில் குறியாக இருக்கிறார் வாக்களிக்க வரும் மக்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டை செந்தில் பாலாஜி தரப்பினர் கொடுத்திருக்கிறார்கள். போலீசார் இதனை கார்குலி ஊராட்சியில் பிடித்திருக்கிறார்கள்.
ஆர்கே நகர் போல் டோக்கன் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். மக்கள் பதற்றத்துடன் இருக்கிறார்கள். நிம்மதியாக ஓட்டு போடவிடாமல் செய்துவிட்டார் செந்தில் பாலாஜி, அவர் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம்” என்றார்