அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகுவதாக கடிதம் அளித்திருக்கிறார்.
அதிமுக அம்மா பேரவை இணை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் தோப்பு வெங்கடாசலம். இது குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்., மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார் தோப்பு வெங்கடாசலம்.
சட்டப்பேரவை உறுதி மொழி குழு தலைவர் மற்றும் வருவாய், சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாசலம் தமது கடிதத்தில், தற்போதைய சூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பை ராஜினாமா செய்வதாக கடிதத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
இவரது விலகலால் அதிமுக.,வுக்கு அடுத்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படும் நிலையில், தோப்பு வெங்கடாசலம் கட்சியிலிருந்தும் விலகுவார் என்று கூறப் படுகிறது.
சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் குறைந்துகொண்டே வரும் நிலையில் தற்போது எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
அதிமுகவுக்கு சட்டசபையில் தற்போது பெரும்பான்மை பலம் இல்லாமல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 3 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகக் கூறப் படும் நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் அரசு கவிழும் நிலை இருந்தது.
இதை அடுத்து, அந்த மூவரையும் சஸ்பெண்ட் செய்து, பெரும்பான்மைக்குத் தேவையான உறுப்பினர் பலத்தைக் குறைக்கலாம் என்று அதிமுக., மேலிடம் சபாநாயகர் மூலம் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டது. ஆனால் அது, உச்ச நீதிமன்றத்தால் தடைபட்டுள்ளது.
அடுத்து, வரும் மே 23ம் தேதி 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், அதனைப் பொறுத்தே அதிமுக., அரசின் பலம், ஆட்சி நீடிப்பு இவை குறித்தெல்லாம் ஒரு உறுதியான நிலவரம் தெரியும்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும் பெருந்துறை எம்.எல்.ஏ.வுமான தோப்பு என்.டி. வெங்கடாச்சலம தான் வகிக்கும் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
அவர், தான் வகித்த அம்மா பேரவை இணைச்செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடிதம் அனுப்பியுள்ளார். கட்சியில் இருந்து விலகுவது குறித்து விரைவில் முடிவெடுக்க இருப்பதாகவும் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
அவர் கட்சியில் இருந்து விலகினால், சட்டமன்றத்தில் அதிமுகவுக்கு மேலும் பலம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.