கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியும், அரவக்குறிச்சி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியும் மேற்கொண்டு வரும் செயல்களால் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதாகக் கூறப் படுகிறது.
குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து திருச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தனித்தே போட்டியிட வேண்டும். எவ்வளவு நாளைக்குத்தான் காங்கிரசுக்கு பல்லக்கு தூக்குவது? என்றார்.
அவரது பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கே.என்.நேருவின் பேச்சுக்கு பதில் அளித்த, தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், கூட்டணி சூழ்நிலைக்கு ஏற்ப அமைகிறது. நாங்கள் யாரையும் பல்லக்கு தூக்க சொல்லவில்லை என்றார்.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. கூறுகையில், கே.என்.நேருவின் கருத்து தி.மு.க.வின் கருத்தாகி விடாது. அவர் எனக்கு நல்ல நண்பர். ஏன் அப்படி பேசினார் என தெரியவில்லை என்றார்.
இதனால் கே.என்.நேருவின் பேச்சு தி.மு.க-காங்கிரஸ் இடையே திடீர் மோதலை ஏற்படுத்தியது. தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியே கோஷ்டி மோதலின் கூடாரமாக இருந்து வந்த நிலையில், தற்போது ஒவ்வொரு மானசீக காங்கிரஸ் கட்சியினர் ஏன்? தி.மு.க வுடன் நாம் ஏன் இணைய வேண்டுமென்று சிந்திக்க தொடங்கியுள்ளனர்.
மேலும், காங்கிரஸ் தயவினாலும் மோடி எதிர்ப்பினாலும்தான் தி.மு.க வெற்றி பெற்றதாகவும், தி.மு.க.வுக்கும், தி.மு.க வில் அங்கம் வகிக்கும், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் எங்கும் வாக்கு வங்கி அமையவில்லை என்றும் ஒருமித்த கருத்தாக தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் காங்கிரஸ் கமிட்டியும் தலைகீழாக மாறியுள்ளது. தி.மு.க மாவட்டப் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி தி.மு.க எம்.எல்.ஏ வுமான செந்தில் பாலாஜியும், கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியும் உறவினர்களாம்! அதுவும் அக்கா தம்பி முறையாம்!
அதனால் கட்சியோ, அல்லது கூட்டணியோ எப்படியோ இருக்கட்டும், நாம் இருவரும் ஒன்றாகவே பயணிக்கலாம் என்று இருவரும் ஒன்றாகவே திடீர், திடீரென்று முடிவுகள் எடுத்து அதிரடியாக களமிறங்குகின்றனர்.
மணல் மாபியாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ஜோதிமணி, தற்போது எம்பி.,யான பின்னர் மணல் அள்ள வேண்டுமென்று கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு கொடுத்தார். அவரது இந்த நடவடிக்கை, ஜோதிமணியின் பேஸ்புக் மற்றும் டுவீட்டர் ஃபாலோயர்ஸுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அரவக்குறிச்சியில், அரசுக்கு சொந்தமான எம்.எல்.ஏ அலுவலகம் இருந்தும் இன்றும் அதை பயன்படுத்தாமல்., கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தனியார் வாடகைக் கட்டடத்தில், தனது சொந்த செலவில், எம்.எல்.ஏ. அலுவலகத்தை செந்தில் பாலாஜி திறந்தார்.
இதிலும் கட்சி முக்கியப் பிரமுகர்களை மட்டும் அழைத்த தி.மு.க மாவட்ட பொறுப்பாளரும் அந்தத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி, அங்கிருந்த உள்ளூர் தி.மு.க பிரமுகர்களைக் கழட்டி விட்ட நிலையில், அதே நிகழ்ச்சியில் அதே வாடகைக் கட்டடத்தில் , கரூர் எம்.பி., ஜோதிமணிக்கும், தனது அலுவலகத்திலேயே தனிஅறை ஒதுக்கித் தந்துள்ளார் என்றால் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்களேன்… என்கின்றனர் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள்!
எது எப்படியோ, உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ்- தி.மு.க கூட்டணி இருக்கிறதா இல்லையா? என்று தெரியாமல் இருக்கும் நிலையில் இருவரும் ஒரே கட்டடத்தில் அலுவலகத்தினைத் திறந்திருக்கிறார்கள்.
வருங்காலக் கூட்டணி குறித்து தலைமையும் முடிவு செய்யாத நிலையில் இருவரும் இப்போது ஒன்றாகவே செயல்படுகிறார்கள்.
கடந்த வருடம் அரவக்குறிச்சியில் இதே தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியின் போது, இதே தொகுதியினை தி.மு.க.வுக்கு காங்கிரஸ் – தி.மு.க தலைமை முடிவெடுத்து அறிவித்த நிலையில், நான் தான் வேட்பாளர் என்றும் சுயேட்சையாகக் கூட போட்டியிடுவேன் என்றும் கூறியவர் ஜோதிமணி.
எனவே உள்ளாட்சித் தேர்தலில் தலைமையை மீறி முடிவெடுக்க தற்போதே ஒத்திகை பார்ப்பது போல் இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பிரமுகர்கள். இதையே தான் பிரதிபலிக்கின்றனர் தி.மு.க மற்றும் காங்கிரஸ் முக்கியப் பிரமுகர்களும்!