மெகா ஸ்டார் சிரஞ்சீவி பிஜேபியில் சேரப்போகிறார் என்று தகவல்கள் இப்போது உலா வருகின்றன. அவர், பாஜக., முக்கியத் தலைவர்களை விரைவில் சந்திக்க உள்ளார் என்று கூறப் படுகிறது.
பிரஜா ராஜ்யம் கட்சியைத் தொடங்கி பின்னர் காங்கிரஸுடன் தன் கட்சியைக் கலந்து, காங்கிரஸில் கரைந்து, மாநிலங்களவைக்கு தேர்வாகி, தொடர்ந்து மத்திய சுற்றுலா அமைச்சராகவும் இருந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி, இப்போது காவித் துண்டு அணியத் தயாராகியிருக்கிறார் என்கிறார்கள்.
அப்படியா என்று ஆச்சரியமாகக் கேட்பவர்களுக்கு, ஆமாம் என்றே அவர் குறித்த அண்மைய குறிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன.
தெலுங்கு மாநிலங்களில் ஆபரேஷன் கமலம் என்ற பெயரில் முக்கிய தலைவர்களுக்கு காவித் துண்டு அணிவித்து கட்சியை பலப்படுத்தி வருகிறது பாஜக.,! அனைத்து சமூகத்தினரையும், அனைத்து பிரிவு மக்களையும் கட்சியில் சேர்ப்பதை லட்சியமாகக் கொண்டு காய் நகர்த்தி வருகிறது பாஜக., என்கிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக, அண்மையில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் நான்கு பேர் பாஜக.,வில் சேர்ந்தார்கள். மேலும் சிலர் பாஜக.,வில் இணைவதற்கு தயாராக வரிசை கட்டி நிற்கிறார்கள். முன்னாள் எம்எல்ஏ அம்பிகா கிருஷ்ணா இதில் ஆர்வமாக இருப்பதாகக் கூறப் படுகிறது. அதேபோல் ராயலசீமாவில் பெரிய குடும்பங்கள் கூட பாஜக.,வில் சேர தயாராக உள்ளதாகத் தெரிகிறது.
காப்பு இனத் தலைவர்களுள் ஒருவரான சிரஞ்சீவி காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து இருந்து வந்தாலும் கடந்த தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. கடந்த ஏப்ரல் மாதத்துடன் சிரஞ்சீவியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் முடிந்து போனது.
தற்போது, ஆந்திரப் பிரதேசத்தில் ஏறக்குறைய 74 தொகுதிகளில் காப்பு இன சமூகம் பலம் வாய்ந்ததாக உள்ளது. அதனால் சிரஞ்சீவிக்கு பாஜக.,வின் ஆந்திரப் பிரதேச தலைவர் பதவிகூட கிடைக்கும் என்று கூறப் படுகிறது. உண்மையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி பாஜக.,வில் சேர்ந்தால் அவருடைய ஸ்டார் இமேஜ் கட்சிக்கு பலம் கொடுக்கும் என்கிறார்கள் பாஜக.,வினர்.
இவை எல்லாம் ஒரு புறம் இருந்தாலும், கடந்த சில நாட்களாக திரைப்படங்கள் மீது கவனம் செலுத்திவரும் சிரஞ்சீவி “சைரா நரசிம்ஹாரெட்டி” பட ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார்.