மாநிலங்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து போட்டியிட திமுக., கூட்டணியில் இருந்து மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக திமுக., ஆட்சிக் காலத்தில் கடந்த 2009ம் ஆண்டில் இந்திய இறையாண்மைக்கு எதிராக வைகோ பேசிய நிகழ்வில், தேச விரோதப் பேச்சு குறித்து பதிவு செய்யப் பட்ட வழக்கில், வைகோ குற்றவாளி என தீர்ப்பு வந்தது. தற்போது தண்டனைக் காலம் குறித்த முடிவு மேல்முறையீட்டுக்காக தள்ளி வைக்கப் பட்டுள்ளது என்ற போதும், அவர் இதன் மூலம் மாநிலங்களவை உறுப்பினர் ஆக முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், வைகோவின் மனு நிராகரிக்கப்பட்டால் நிலைமையை எதிர்கொள்ள திமுக தயாராகி வருகிறது.
திமுக.,வில் ஏற்கெனவே இருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், மேலும் ஒருவர் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறப் படுகிறது.