வேலூர் மக்களவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும்… என்று மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வரும் ஆக.5-ல் தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுக., கூட்டணி சார்பில், புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வேட்பாளராக உள்ளார்.
இந்நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தேனாம்பேட்டை அன்பகத்தில் திங்கள்கிழமை நேற்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களிடம் மு.க.ஸ்டாலின் பேசியபோது, மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று யாரும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. 37 தொகுதிகளிலும் மக்களுக்குப் பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து வெற்றி பெற்றுவிட்டோம் என்று கூறி வருகின்றனர்.
வேலூரிலும் இதையே கூறுவர். அதனால், வேலூர் தேர்தலில் எப்படியும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். வேலூர் தேர்தல் வெற்றிதான் உண்மையான வெற்றியாக அமையும். 2 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் வர உள்ளது. அதிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்றார்.
மு.க.ஸ்டாலினின் இந்தப் பேச்சு இப்போது பலவிதங்களில் விவாதிக்கப் பட்டு வருகிறது.