உத்தர்காண்டில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சி என பாஜக எம்.பி தருண் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை கரையில் 12 அடி திருவள்ளுவர் சிலையை நிறுவ பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் முயற்சி செய்தார். கடந்த 29-ந் தேதி ஆளுநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்ட விழாவில் சிலையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், சாதுக்கள் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை தற்காலிகமாக நிறுவப்பட்டது.
ஆனால், திருவள்ளுவர் சிலையானது தற்போது அங்குள்ள பூங்கா ஒன்றில் கறுப்பு நிற கவரால் சுற்றி, கட்டப்பட்ட நிலையில், கேட்பாரற்று கிடக்கிறது.
ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலைக்கு நேர்ந்த அவலம் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தருண் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த செயல் சமூக நல்லிணக்கத்தை சீரழிக்கும் முயற்சி என்றும் திருவள்ளூவருக்கு மிகப் பெரிய அவமானம் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது என்று தருண் விஜய் கூறினார்.
சிலையை அகற்ற முயற்சித்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஹரித்வார் மாவட்ட ஆட்சித் தலைவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தருண் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
சிலை மீண்டும் உரிய மரியாதையுடன் அதே இடத்தில் நிறுவப்பட உத்தரகாண்ட் ஆளுநர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு விரைவில் கடிதம் எழுத உள்ளதாகவும் தருண் விஜய் தெரிவித்துள்ளார்.