இவ்வளவு காலம் பொதுவான நடிகராகவே தன்னை முன்னிறுத்தி கொண்ட சூர்யா, என்ஜிகே படம் மூலம் அரசியல் கதைகளுக்கு ஒரு துவக்கத்தை ஏற்படுத்தினார். இதில் அரசியல்வாதியாகவே அவர் நடித்திருப்பார்.
தானா சேர்ந்த கூட்டம் படத்தில் தனது சமூக கோபத்தையும் அவர் வெளிப்படையாகவே காட்டியிருந்தார். அதனால் அரசியலில் சூர்யா ஈடுபடுவார் என்ற தகவல் வெளியானாலும், அதற்கு அவர் எந்த மறுப்பும் தெரிவிக்கவும் இல்லை.இந்த சமயத்தில்தான் புதிய கல்வி கொள்கை குறித்த விமர்சனத்தை முன் வைக்கவும், திரும்பவும் அரசியலுக்குள் நுழையும் அஸ்திவாரமாக இதனை சிலர் பார்க்க ஆரம்பித்துள்ளனர். அதிமுகவின் எதிர்ப்பு, பாஜகவின் நெருக்கடிகள் என்று தொடர்ந்து விமர்சனங்களுக்குள் அடைபட்டு கொண்டுள்ளார். கிட்டத்தட்ட பாஜகவின் எதிர்ப்பு அரசியலை இவர் கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.அதனால்தான் சூர்யாவின் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்ட ஆரம்பித்து விட்டனர். பெரும்பாலான அரசியல்வாதிகள் பிள்ளையார் சுழி போடும் பிரதான இடம் மதுரையாக இருந்திருக்கிறது என்பதால், இங்குதான் சூர்யாவின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அனைவரையும் கவர்ந்துள்ளது.
’அகரத்தின் முதல்வரே’ என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் நம்மை ஈர்க்கிறது. கல்விக்கண் திறந்த காமராஜர், மக்கள் மனதை கவர்ந்த அப்துல்கலாம் வரிசையில், சூர்யாவின் போட்டோவும் போஸ்டர்களில் நிறைந்திருக்கிறது. பாஜகவுக்கு மாற்றாக சூர்யாவை உச்சத்தில் வைத்து பார்க்க துவங்கி உள்ளனர் ரசிகர்கள்.
இணையதளங்களில், சூர்யா விரைவில் காங்கிரசில் இணைவார் என்ற கிசுகிசுக்களும் வந்த வண்ணம் இருகின்றன.
சூர்யாவை நாம் இத்தனை காலம் பார்த்து வந்தாலும், இந்த முறை பிறந்த நாளில் ஒரு ஸ்பெஷல் தெரிந்தது. “அரசியலுக்கு வா தலைவா” என்று வெளிப்படையாகவே அழைத்து தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.