ஆகஸ்ட் 18 அன்று தெலங்கானாவில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியினர் கூண்டோடு பாஜக.,வில் சேர உள்ளனர்.
ஆபரேஷன் ஆகர்ஷண்:- தாமரையில் தஞ்சம் புகுகின்றனர் தெலுகு தேசம் கட்சித் தலைவர்கள். தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பலர் பிஜேபியில் சேர்வதற்கு மேடை தயாராகிவிட்டது.
18ஆம் தேதி பாஜக., தேசிய செயல் தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் மஞ்சள் துண்டை தூக்கிவிட்டு காவித் துண்டைப் போர்த்திக் கொள்ளப் போகிறார்கள்.
தெலங்கானாவில் தெலுகு தேசம் கட்சியை முழுவதுமாக துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக பாரதிய ஜனதா கட்சி தெலுகு தேசம் கட்சித் தலைவர்களை தங்கள் கட்சியில் இணைப்பதற்கு பச்சைக் கொடி காட்டி உள்ளது. அதனால் தெலுகு தேசம் கட்சித் தலைவர்களை பெரிய அளவில் சேர்த்துக் கொள்வதற்கு அனைத்தும் தயாராகி விட்டது.
இந்த மாதம் 18-ஆம் தேதியிலிருந்து பெரிய அளவில் தலைவர்களும் உறுப்பினர்களும் பாஜக., தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் சேர உள்ளார்கள். தெலுகு தேசம் தேசியத் தலைவர் மாநிலன்களவை உறுப்பினர் கரிகிபாடி மோஹனராவு மற்றும் பல தலைவர்கள் தாமரை மலரை கைகளில் ஏந்த உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்காக நாம்பல்லி எக்ஸிபிஷன் கிரவுண்டில் மிகப்பெரிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள். சென்ற தேர்தலில் தெலுகுதேசம் கட்சியில் நின்று தோற்ற பல தலைவர்கள் பிஜேபி பக்கம் திரும்பி உள்ளதாக தெரிகிறது.
எல் தீபக் ரெட்டி, ரஜனீகுமாரி, ரங்கா ரெட்டி, முன்னாள் அமைச்சர் கோனேரு நாகேஸ்வரராவின் புதல்வர் கோனேரு சின்னி முதலானோர் பிஜேபியில் சேர உள்ளார்கள். தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிப்பதே முக்கிய இலக்கு என்று காய் நகர்த்திக் கொண்டுள்ள பிஜேபி அதற்கு ஏற்ப இப்போது சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.
தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு மாற்றாக பிஜேபி கட்சியை முன்னிறுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டுள்ளார் பிஜேபி தேசிய தலைவர் அமித் ஷா!