spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகேள்வி பதில்எம் கேள்விக்கென்ன பதில்? (கமல் ஹாசனுக்கு)

எம் கேள்விக்கென்ன பதில்? (கமல் ஹாசனுக்கு)

- Advertisement -

(பொதுவாக இடதுசாரித் தரப்புக்கு ஒரு பொய்யான பிம்பம் உண்டு. அதாவது அவர்களில் அறிவார்ந்தவர்கள் அதிகமாம். அறிவார்ந்த சிந்தனை அவர்களுக்கு அதிகமாம். விஷயம் என்னவென்றால் எந்தவொரு உண்மையான கேள்வியையும் கேட்டுக்கொள்ளாமல், கேட்கவிடாமல் தம்மைப் பொத்திப் பாதுகாத்துக்கொண்டு, தமக்கான பாதுகாப்பான வளையத்துக்குள் இருந்துகொண்டு வீறாப்பு பேசும் கலையில் தேர்ந்தவர்கள் என்பதே உண்மை.

எந்தவொரு விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் சில எளிய கேள்விகள் கேட்கப்பட்டாலே அவர்கள் அம்பலப்பட்டுப் போவார்கள். அந்தக் கேள்விகளைக் கேட்கவிடாமல் தப்பிப்பதில்தான் அவர்களின் அறிவுஜீவித்தனமே நிறைந்திருக்கிறது.

இங்கு கேட்கப்பட்டிருக்கு கேள்விகள் முற்போக்கு அறிவுஜீவி என்று காட்டிக்கொள்ளும் கமலுக்கு மட்டுமல்ல… அந்தத் தரப்பில் இருக்கும் எல்லாருக்குமானதுதான். ஒரு அப்பனுக்குப் பொறந்திருந்தா பதில் சொல்லுங்கடா பாக்கலாம் என்று சவால் விடுவது ஈவேராத்தனமானது. எனவே, நற்குடியில் பிறந்த இடதுசாரிகள் இவற்றுக்கு பதில் சொல்லலாம் என்று கண்ணியமாகவே கேட்கிறேன்)

எம் கேள்விக்கென்ன பதில்..? (கமல்ஹாசனுக்கு)

1. மற்ற கட்சிகளில் இருந்து உங்கள் கட்சி எந்தவகையில் மாறுபட்டது என்ற கேள்விக்கு ஹமாம் சோப்புக்கு அடுத்தபடியாக “எங்களிடம்(தான்) நேர்மை இருக்கிறது’ என்று சொன்னீர்கள். உங்களுடைய திரைப்படங்களில் பிற மொழி, பிற நாட்டுத் திரைப்படங்களின் காட்சிகள், கதை, போஸ்டர் வடிவம் இவற்றைப் பயன்படுத்தியபோது அவற்றுக்கான குறைந்தபட்ச நன்றி அறிவிப்பைக்கூட வெளியிடவிடாமல் இருந்தது தவறுதான் என்பதை ஒப்புக்கொள்ளும் நேர்மை உங்களிடம் இப்போதாவது இருக்கிறதா?

2. இந்து மதத்தைமட்டுமே ஏன் விமர்சிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு என் வீட்டில் இருக்கும் ஒட்டடையையும் சிலந்தியையும் முதலில் தட்டிவிடுவதுதான் என் கடமை என்று சொன்னீர்கள். இஸ்லாம் இந்தியாவுக்கு வந்து 1000 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. கிறிஸ்தவம் இந்தியாவில் காலூன்றி 500 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இரண்டு மதத்தினரையும் சேர்த்தால் (அறிவித்துகொண்ட கிறிஸ்தவ இஸ்லாமியர், அறிவித்துக்கொள்ளாத க்ரிப்டோ கிறிஸ்டியன் உட்பட) இந்தியாவில் சுமார் 30 சதவிகிதத்துக்கு மேல் வருவார்கள். இந்துவாக இருந்துகொண்டே கிறிஸ்தவ, இஸ்லாமிய அடிப்படைவாத பிரதர்கள் மேல் பாச மழை பொழியும் உங்களைப் போன்றோரைச் சேர்ந்தால் அந்த எண்ணிக்கு இன்னும் இரு மடங்கு கூடும். அந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய வீடுகளில் உறையும் பாம்புகள், தேள்கள் பற்றிப் பேசவேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் கருதவில்லையா?

உங்கள் நண்பர் கருணாநிதி ராமர் எந்தக் கல்லூரியில் பொறியியல் படித்தார் என்பதுபோல் அறிவார்ந்த கேள்விகள் கேட்பாரே நீங்களும் கன்னிப் பெண்ணுக்கு எப்படி குழந்தை பிறக்க முடியும் என்று உங்களுடைய அசட்டுப் புன்னகையும் குறும்பும் மிளிரக் கேள்வி கேட்டுத் தொடங்குவீர்களா?

3. ஒரு பெண் திருமணத்துக்கு முன் உடலுறவு கொள்வது, திருமணத்துக்குப் பின்னும் வேறு ஆடவருடன் உடலுறவு கொள்வது இவைபற்றிய உங்கள் பார்வை என்ன? தமிழர் நலன் பாதிக்கப்படுவதையும் தமிழர் மரபணு மாற்றப்படுவதையும் தடுக்கவே அரசியலுக்கு வந்திருப்பதாகச் சொல்லும் நீங்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்று சொல்லும் தமிழ் கலாசாரத்தை மதிக்கிறீர்களா..? பிறனில் விழையாமை எழுதிய வள்ளுவரை மதிக்கிறீர்களா? தமிழர்களின் மரபணுவை மாற்ற முயற்சி செய்வது நீங்கள்தானே. கடவுள் இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என்று சொல்லும் நீங்கள் இந்துக் கடவுள்களுக்கே ரெண்டு மனைவிகள் என்ற அசட்டு பதிலை மட்டும் சொல்லவேண்டாம்.

சல்லிக்கட்டு விவகாரத்தில் காளைகளைக் காட்சிப் பொருளாக அறிவித்துத் தடை போட்ட காங்கிரஸா… சல்லிக்கட்டு இந்துப் பாரம்பரிய விழா என்று வாதாடி அதை நடக்க வைத்த பாஜகவா எது தமிழர்களின் மரபணுவை மாற்ற முயலும் கட்சி..?

4. திரைப்படத்துறையில் குறிப்பாகக் குடும்பத் தமிழ்த் திரைப்படங்கள் ஃபோர்னோ படங்களைவிட மோசமான அசைவுகள், காட்சிகளுடன் இருப்பதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

5. கூடன் குளம் அணு மின் உலையை எதிர்த்துப் போராட்டம் நடந்தது. ஆனால், உலகிலேயே மிகப் பெரிய சூரிய மின் உற்பத்தி மையம் கமுதியில் அமைக்கப்பட்டதற்கு ஒரு பாராட்டு கூட இல்லையே… அப்துல்கலாமின் சீடராகவும் அறிவியல் சார்ந்து சிந்திக்கும் நவீன மனிதராகவும் காட்டிக்கொள்ளும் நீங்கள், மீத்தேன் வாயு எடுப்பதால் விளை நிலங்களுக்கு பாதிப்பில்லை, நியுட்ரினோ பரிசோதனையால் தமிழகம் சுடுகாடு ஆகாது, இணையம் துறைமுகமோ சாகர் மாலா திட்டங்களோ மீனவர்களை அழித்துவிடாது…

தமிழகம் இன்று முன்னணி மாநிலமாக இருப்பதற்கு நெய்வேலி தொடங்கி காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட பெருந் தொழிற்சாலைத் திட்டங்களே காரணம் என்ற உண்மைகளை எடுத்துச்சொல்வது உங்கள் கடமை என்று நினைக்கவில்லையா? அவையே தமிழர் நலனுக்கானவை என்ற புரிதல் இருந்தும் ஏன் மவுனம் காக்கிறீர்கள்.

6. இஸ்லாமிய நாடுகளிலும் கம்யூனிஸ நாடுகளிலும் கருத்து சுதந்தரம், பத்திரிகை சுதந்தரம் எப்படியாக இருக்கிறது என்று கொஞ்சம் உதாரணங்களுடன் நம் தேசத்துடன் ஒப்பிட்டுச் சொல்லுங்களேன். விஸ்வரூபம் பிரச்னையின் போது நாட்டை விட்டே போய்விடுவேன் என்று ஆசை வார்த்தைகள் காட்டினீர்கள். எந்த இஸ்லாமிய நாட்டுக்குப் போயிருப்பீர்கள்?

7. புர்கா அணியத்தடை, இஸ்லாமிய முறைப்படி தாடி வளர்க்கத்தடை, ரமலான் நோன்பு நேரத்தில் நாள்முழுவதும் சாப்பிடாமல் இருந்தால் களைத்துவிடுவீர்கள் என்பதால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் இஸ்லாமியர்கள் மதியம் கட்டாயம் சாப்பிட்டாகவேண்டும், ரமலான் மாதத்தில் உணவு விடுதிகளை மூடினால் தண்டனை, ஹலால் முறையில் (குர்ரான்மந்திரங்கள் ஓதி கழுத்தை அறுத்து ரதம் வடியும்வரை துடிக்கத் துடிக்க) கொல்லப்பட்ட சுத்தமான மாமிசம் என்று விளம்பரம் செய்யக்கூடாது, குழந்தைகளுக்கு விஞ்ஞானம், சீன கலாசாரம், சீன ஒற்றுமை, மத அடிப்படைவாத எதிர்ப்பு போன்ற நல்ல விஷயங்களை மட்டுமே கற்றுத் தரவேண்டும் (அதாவது மதரஸா கல்வி கூடாது), இஸ்லாமிய சாயலுடனான பெயர்கள் சூட்டுவதைக் குறைக்கவேண்டும்,

சீன அரசு சொல்லும் குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தைக் கடைப்பிடித்தாகவேண்டும், இஸ்லாமியர்கள் பாஸ்போர்ட் மட்டுமல்ல நன்கு கேட்டுக்கொள்ளுங்கள் டி.என்.ஏ. சாம்பிள், கை ரேகை, சிறைக் கைதிகள் போல் நேர் போஸ், பக்கவாட்டு போஸ் என முப்பரிமாண போட்டோக்கள் கொடுத்தாகவேண்டும்… தோழர் பினராயியிடம் கலந்தாலோசித்து இவற்றில் எதையெல்லாம் இந்தியாவில் அமல்படுத்தலாம் என்று கேட்டுச் சொல்கிறீர்களா?

இப்போது இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு மேலே சொன்னவற்றில் ஒரு தடை கூடக் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் ரமலான் மாதத்தில் இந்துக்கள் கடை திறக்கக்கூடாது… அவர்களும் பட்டினி கிடந்தாகவேண்டும் என்பதுதன் கேரள முஸ்லீம்களின் சட்டம். அது அமலிலும் இருக்கிறது. இந்திய மருத்துவர்கள் ஏதேனும் விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நடத்துவதானால் இஸ்லாமியப் பெண்கள் மிகப் பெரிய திரைச்சிலைக்குப் பின்னால் அமர்ந்திருப்பார்கள். மருத்துவர் அந்த துணையைப் பார்த்துத்தான் விளக்கவேண்டும். பிற ஆண்களை இஸ்லாமியப் பெண்கள் பார்க்கக்கூடாது என்பது குர்ரானில் எந்தப் பக்கத்தில் எந்த அத்தியாயத்தில் இருக்கிறது என்பது உங்கள் தம்பி அமீரிடம் கேட்டால் சொல்வார். விஸ்வரூபம் பிரச்னையில், சில கோடிகளை இங்க ஒழுங்கா வெட்டுங்க… இல்லைன்னா எங்க ஆளுங்க உங்களை வெட்டிருவாங்கன்னு உங்க வீட்டுல தொழுகை நடத்திக்கிட்டே பேசினாரே அதே அமீர் பாய்தான். அவரிடம் கம்யூனிஸ்ட்களை எப்படி நடத்தவேண்டும் என்று கேட்டால் இஸ்லாமிய நாட்டுச் சட்டங்களை மணிமணியாக எடுத்துச் சொல்வார். அந்த அன்புத் தம்பியிடம் கேட்டுச் சொல்லுங்களேன் கமல்.

8. வறட்சியினால் விவசாயிகள் வேதனைப்படுகிறார்கள் என்று சொல்கிறீர்களே… தமிழகம் உணவு உற்பத்தியில் முந்தைய ஆண்டுகளைவிட இப்போதும் முன்னணியில் இருப்பதுதெரியுமா? மத்திய – மாநில அரசுகள் விவசாயிகளுக்குத் தரும் மானியமானது பண்ணையார்களால் சுருட்டப்படுவது தெரியுமா? ஐந்து ஏக்கருக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு இலவச மின்சாரம், கடன்ரத்து கிடையாது, பிற மானியங்கள் கிடையாது என்று சொல்வதுதானே முறை? நீங்கள் ஏழை விவசாயிக்கு ஆதரவா… பண்ணையாருக்கு ஆதரவா?

9. திரைப்படத்தில் பணி புரிபவர்களில் உடலுழைப்பில் ஈடுபடும் அதாவது பாட்டாளிகளான லைட் மேன், மேக்கப் மேன் தொடங்கி துணைநடிகர், உதவி இயக்குநர்வரை பெறும் சம்பளம் மொத்தத் திரைப்படத்தில் ஐந்து சதவிகிதம் கூட இருக்காது. இயக்குநர் இயக்க, பாடகர் பாட, இசையமைப்பாளர் இசையமைக்க, கேமரா மேன் ஒளிப்பதிவு செய்ய வெறுமனே முகத்தைக் காட்டிவிட்டுப் போகும் நடிகருக்கு 70 சதவிகித பணம் போகிறது. உங்கள் தோழர் பினராயி விஜயன் போன்றோர் உண்மையாக அவர்களுடைய கொளையின்படி நடக்க ஆரம்பித்தால் முதல் துப்பாக்கி குண்டு உங்கள் நெற்றிக்குத்தான். ஒரு பக்கா சுரண்டல்வாத, கேபிடலிஸ்டான நீங்கள் தோழர் என்ற வார்த்தையை புரிந்துதான் பயன்படுத்துகிறீர்களா? அது உண்மையென்றால் உண்மையான தோழமை உணர்வோடு நடந்துகொள்ளத் தயாரா?

10. இந்தியன் படத்தில் ஊழல்வாதிகளைக் கொல்லும் வேடத்தில் நடித்தீர்கள். அதே படத்தில் ஊழலில் திளைக்கும் நபராகவும் நடித்தீர்கள். நிஜ வாழ்க்கையில் ஊழலை எதிர்த்துப் பேசவும் செய்கிறீர்கள். ஊழல் கட்சியான காங்கிரஸ், திமுகவும் கூட்டணியும் வைக்கிறீர்கள். சர்வ தேச மேக்கப் மேன் மேக்கப் போட்டுவிட்டால் படம் சர்வ தேசப்படமாகிவிடும் என்ற நம்பிக்கையில் ஒரே சினிமாவில் பல வேடங்கள் கட்டுகிறீர்கள். சினிமாவைப் போலவே நிஜத்திலும் எல்லா வேடங்களிலும் நடிக்க வேண்டுமா? ஊழலுக்கு எதிரானவனாக மட்டுமே இருக்க முடியாதா?

11. நக்சலைட்டுகள் மாவோயிஸ்டுகளின் வன்முறை தவறு என்று சொல்கிறீர்கள். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிறீர்கள். உங்கள் மனதுக்கு மிகவும் பிடித்தவராக நீங்கள் சொல்லும் காந்தி பிரிட்டிஷார் போன்ற கொடுங்கோலர்களை எதிர்த்து ஜனநாயக வழியில்தான் போராடி வென்றிருக்கிறார். ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு ஜனநாயக வழிக்கு வாருங்கள் என்று அவர்களுக்கு அழைப்புவிடுப்பதும் அதுவரை அவர்களிடமிருந்து விலகி நின்று கண்டிப்பதும்தானே காந்திய வழி. காந்தி உங்களுக்கு யார்..? உங்களுடைய சிவப்புத் தோலுக்கு கறுப்புச் சட்டை ஃபோடோஜெனிக்காக, எடுப்பாக இருப்பதால் அதை அடிக்கடி அணிகிறீர்களே அதுபோல காந்தியத்தைப் பேசுவது நல்லா இருக்கு என்பதாலா?

12. தென் மாவட்டங்களில் ஆதிக்க ஜாதியாக பல்வேறு கலவரங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது தேவர் ஜாதியினர். அவர்களைப் பெருமிதப்படுத்தியே படம் எடுக்கும் நீங்கள் தலித் கதை மாந்தராக (பூவராகன் போன்ற விதிவிலக்குகள் நீங்கலாக) வைத்து எடுத்ததே இல்லையே… ஏன்? பிராமணர்களில் சிலரிடம் இருக்கும் ஜாதிசார்ந்த பிழையான எண்ணத்தைப் பின்பற்றுவதற்கு பதிலாக நீதிகட்சிப் பண்ணையார்களும் அவர்களுடைய வழித்தோன்றல்களும் அவர்களுடைய ஆகப் பெரிய சமூக நீதியான உதட்டளவு தலித் நலன்பற்றிப் பேச ஆரம்பிப்பதற்கு முன்பே திருச்செங்கோட்டில் ஹரிஜன சேவாசமிதி ஆரம்பித்த மூதறிஞர் ராஜாஜி போன்ற உத்தம பிராமணர்களிடமிருந்து எதையேனும் கற்றுக்கொண்டிருக்கலாமே?

13. (இந்த 13-ம் எண் கேள்விக்கு பதில் சொல்ல அனுமதி வேண்டும்; 13-அ என்றெல்லாம் போடமாட்டார்களாம் என்று ஜெகத் கஸ்பரிடம் சொல்லி தேவையான பாவமன்னிப்பை முன்பே கேட்டுக் கொள்ளுங்கள். ஏனென்றால் இது முக்கியமான கேள்வி) தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு முன்புவரைபோராளிகளிடம் எந்தவொரு நியாயமும் இருந்திருக்கவே இல்லை. அதற்கு முன் ஆலையால் மீறப்பட்ட விதிமுறைகள் என்பவை (கடலில் இருந்து குறிப்பிட்ட எல்லைக்குள் ஆலை இருக்கக்கூடாது) பெரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்தியிருக்கவும் இல்லை.

அங்கு பணிபுரிபவர்களுக்கே எந்தப் புற்றுநோயும் அந்த ஆலையால் ஏற்பட்டிருக்காத நிலையில் தூத்துக்குடி மக்கள் முழுவதுமே கேன்சரால் பாதிக்கப்படுவதுபோன்றா போலிப் போராட்டத்தை போலி சூழலியலாளர்கள் முன்னெடுத்தபோது ஏன் ஆதரவு கொடுத்தீர்கள்? இப்போதும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய மாநில அரசை நீக்கச் சொல்வது நியாயம். ஆலையை மூடச் சொல்வது எந்த வகையில் நியாயம்?

(அடுத்த கேள்விகள் செபாஸ்டியன் சைமனுக்கு)

  • பி.ஆர். மகாதேவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe