
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த விவசாயி பாலதண்டாயுதம். மாற்றுத் திறனாளியான இவர் சேத்தூர் அருகே உள்ள அசையா மணி சாலையில் 2 ஏக்கர் நிலத்தை குத்ததைக்கு எடுத்து வாழை விவசாயம் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஒட்டு ரக வாழை கன்றுகளை நட்டு கடந்த 10 மாதங்களாக பராமரித்து வருகிறார். இதில் தற்போது வாழை மரங்களில் குலை தள்ளி உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் அறுவடை செய்ய விவசாயி பாலதண்டாயுதம் முடிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இரவில் சேத்தூர், தேவதானம் கோவிலூர் ஆகிய பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய கோடை மழை பெய்தது. காற்றின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் உயரமாக வளர்ந்திருந்த வாழை மரங்கள் வேருடன் சாய்ந்து விட்டது.
இதனால் 350க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முற்றிலுமாக தரையில் சாய்ந்து விட்டது.
மரங்களை குலையுடன் விற்பனை செய்தால், ஒரு மரம் ரூ. 400 வரை விலை கிடைக்கும். இந்த நிலையில் 350க்கும் மேற்பட்ட மரங்கள் சேதமானதால் தனக்கு ரூ. 1.50 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும்,
தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் பார்வையிட்டு தனக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி விவசாயி பாலதண்டாயுதம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.