அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து, காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப். 3) சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது ஜாமீனை நீட்டித்த நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை இம்மாதம் 13-ம் தேதிக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி (52), ‘மோடி’ என்று பெயர் உள்ளவர்கள் குறித்து அவர் விமர்சித்தார். வங்கிக் கடன் மோசடியில் வெளிநாடு தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி, ஐபிஎல் கிரிக்கெட் மோசடி புகாரில் சிக்கி, வெளிநாடு தப்பிய லலித் மோடி என்று குற்றம் செய்தவர்கள் பெயர்கள் எல்லாம் ‘மோடி’ என்றே முடிகிறது என்று பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி பெயரையும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி இழிவுபடுத்திவிட்டதாகப் புகார்கள் எழுந்தன. ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத்மேற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக விசாரணையில் இருந்தநிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா தீர்ப்பளித்தார். இந்திய தண்டனை சட்டம் 499 மற்றும் 500-வது பிரிவுகளின் கீழ் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. எனினும், உடனடியாக ராகுல் காந்திக்கு நீதிமன்றம் ஜாமீனும் அளித்தது. அத்துடன், மேல்முறையீடு செய்வதற்காக சிறை தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இரண்டு மனுக்கள்: சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று (ஏப்.3) மேல் முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுடன் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஒன்று தண்டனையை ரத்து செய்வது தொடர்பானது, இரண்டாவது தீர்ப்பினை ரத்து செய்வது தொடர்பானது. இந்த நிலையில், சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி, வழக்கை ஏப்ரல் 13-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராகுல் காந்தியின் வழக்கறிஞர்கள் கூறும்போது, “செஷன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. தண்டனைக்கு தடை விதிக்கலாமா வேண்டாமா என்பது விசாரணைக்கு பின்னரே முடிவு செய்ய முடியும் என்றும், அடுத்த விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜராகத் தேவையில்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது” என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போராட்டம். இந்தப் போராட்டத்தில் உண்மையே என் ஆயுதம். உண்மையே எனக்கான உறுதுணை” என்று தெரிவித்துள்ளார்.