சபரிமலை விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை கேரள அரசே சீர்குலைத்துள்ளது. ஒரு மதம் சார்ந்த நம்பிக்கையை சிதறடித்ததன் மூலம், பொதுமக்களின் அமைதியைக் குலைத்து, ஒரு தரப்பினரை வன்முறைக்குத் தூண்டிவிட்டுள்ளது. பெண்கள் அனுமதிக்கப்பட்ட விவகாரத்தில் கேரளத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதை அடுத்து, நாளை கேரளாவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. காலை 6 முதல் மாலை 6 மணிவரை இந்த முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும். இதனை சபரிமலை பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது.
ஒரு தரப்பு மக்களின் மத நம்பிக்கையைக் குலைக்கும் வகையில், அரசு இயந்திரத்தைக் கைக்குள் வைத்துக் கொண்டுள்ள கம்யூனிஸ்ட்கள், தங்கள் கட்சிக் கொள்கைகளை பெரும்பான்மை சமுதாய மக்களிடம் திணித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் முதலமைச்சர் பிணராயி விஜயன் பதவியை ராஜினாமா செய்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப் படுகிறது.
சபரிமலையில் காவல்துறை உதவியுடன் பெண்கள் நுழைந்த விவகாரத்தால், சபரிமலை மீது நம்பிக்கை கொண்டிருக்கும் ஏராளமானோர் அரசுக்கு எதிராகத் திரும்பியுள்ளனர். இதனிடையே, தென் கேரளத்தின் பல இடங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தென் கேரளத்தில் உள்ள புனலூர், கொட்டாரக்கரை, கருநாகப்பள்ளி, பத்மனாபபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பகுதிகளில் போலிஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முயன்றதால், போலீசார் பொதுமக்கள் மோதலாக இது உருவெடுத்துள்ளது.
சட்டம் ஒழுங்கு சீர்கெடக் காரணமானதற்கு கேரள அரசின் நடவடிக்கையே காரணம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்!