நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த மாதம் 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது. புவி சுற்றுவட்டப்பாதையில் 23 நாட்களாக சுற்றி வந்து கொண்டிருந்த விண்கலம் அப்பாதையில் இருந்து விலகி கடந்த புதன்கிழமை நிலவை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியது.
தொடர்ந்து 5 நாட்கள் நிலவை நோக்கிய பயணத்தை தொடர உள்ள விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை நாளை மறுநாள் சென்றடைய உள்ளது. இந்நிலையில், சந்திரயான்-2 செப்டம்பர் 7-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து ரோவரை சுமந்து நிலவில் லேண்டர் தரையிறங்கும்.
லேண்டரில் இருந்து ரோவர் கீழிறங்கி நிலவில் கால் பதித்து ஆய்வு நடத்தும். இதனிடையே ஆர்பிட்டர் சற்று தொலைவில் இருந்தபடி ஓராண்டு வரை நிலவை சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்ளும், லேண்டர் மற்றும் ரோவர் அமைப்புகள் தலா 14 நாட்கள் மட்டுமே நிலவின் தரைப் பகுதியை ஆய்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ நான் தான் சந்திரயான் 2 பேசுகிறேன். இந்த பிரம்மாண்டமான பயணத்தை மேற்கொண்டிருக்கும் நான், சரியாக செப்டம்பர் 7 ஆம் தேதியன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவேன்’ என சந்திரயான் விண்கலம் கூறுவது போலவே பதிவு செய்துள்ளது. நிலவின் பரப்பில் சந்திரயான் 2 தரையிறங்குவதை செப்டம்பர் 7-இல் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடியும் காண உள்ளார்.
Hello! This is Chandrayaan 2 with a special update. I wanted to let everyone back home know that it has been an amazing journey for me so far and I am on course to land on the lunar south polar region on 7th September. To know where I am and what I’m doing, stay tuned! pic.twitter.com/qjtKoiSeon
— ISRO (@isro) August 17, 2019