அமித் ஷா மற்றும் ஆதித்யா மடிராஜூ ஆகிய இருவரும் சமுதாயத்தின் அத்தனை தடைகளையும் தாண்டி திருமண வாழ்வில் சேர்வது என்பதில் உறுதியாய் இருந்து திருமணம் புரிந்திருக்கின்றனர். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அவர்களது திருமண புகைப்படங்களுக்கு அநேகர் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
அமித் ஷாவும் ஆதித்யா மடிராஜூயும் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் வாழ்ந்து வருகின்றனர். அமித், ஸ்பிரிட் என்ற நடன நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஆதித்யா, பேரிடர் மேலாண்மை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக அதாவது 2016ம் ஆண்டு இருவரும் ஒருவர்பால் மற்றவருக்கு இருக்கும் காதலை வெளிப்படுத்தியுள்ளனர். அதிலிருந்து இருவரும் இணைந்தே இருக்கின்றனர்.
ஆனாலும் நியூ ஜெர்ஸியில் ராபின்ஸ்வில்லேயிலுள்ள பிஏபிஎஸ் ஸ்ரீ ஸ்வாமிநாராயண் மந்திரில் இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணத்தில் இணைய முடிவு செய்தனர். இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள இந்த ஜோடியின் புகைப்படங்களை காணும் அனைவருமே இவர்களது கனவு காதலை உணர்ந்து கொள்ள இயலும்.
“நாங்கள் டேட்டிங் செய்த முதலாம் ஆண்டில் எங்கள் விருப்பங்களை முற்றிலும் எதிரானதாக மாற்றி தனிப்பட்ட முறையில் சோதனை செய்து பார்த்தோம். ஆனாலும் காதலை வெளிப்படுத்தும் சுதந்திரம் வேண்டும் என்பது எங்கள் இருவரின் விருப்பமாக இருந்தது” என்று நன்றி தெரிவிக்கும் இன்ஸ்டாகிராம் பதிவில் ஆதித்யா எழுதியுள்ளார்.
“கடந்த சில நாள்கள் எனக்கும் ஆதித்யாவுக்கும் வாழ்த்து தெரிவித்து வரும் அனைவருக்கும் நன்றி. அனைவருக்கும் தனித்தனியாக பதில் கூற இயலாவிட்டாலும் உங்கள் ஆதரவுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
நாங்கள் வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பியுள்ள இந்த தருணத்தில் ஒருபாலின திருமணத்தை பற்றிய உங்கள் பார்வை மற்றவர்களுடன் ஒத்துப்போகாதிருந்தாலும், அதைக் குறித்த விவாதம் ஆரோக்கியமானதாக இருக்கட்டும். ஒருவருக்கு தெரியாத ஒன்றைப் பற்றி மனதை திறந்து அறிந்துகொள்ள சற்று காலமும் பொறுமையும் தேவைப்படும்.
கோபமோ, விரக்தியோ விழிப்புணர்வை ஏற்படுத்தாது. இனம், பாலினம், மதம், முன்னுரிமை ஆகியவற்றை காட்டிலும் காதல் வலிமையானது என்பதை அதுபோன்றவர்கள் உணரவும் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு தாருங்கள்.
உரையாடல் தொடரட்டும்” என்று தங்கள் புகைப்படம் ஒன்றின் கீழ் அமித் எழுதியுள்ளார். தங்கள் திருமணத்தின்போது இருவரும் அனிட்டா டாங்கிரி நிறுவன தயாரிப்பான ஆடைகளை அணிந்திருந்தனர். திருமணத்தை தொடர்ந்து நடந்த கலக்கல் விருந்தில் குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டனர்