74 வயதில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான அதிசயம் ! மருத்துவர்கள் சாதனை: ஆந்திராவில் 74 வயது மூதாட்டி ஒருவர் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியை சேர்ந்தவர் ராஜா ராவ்(80). இவரது மனைவி மங்கயம்மா(74). இவர்கள் இருவருக்கும் கடந்த 1962ஆம் ஆண்டு திருமணம் ஆனது.
இவர்கள் இருவருக்கும் குழந்தை பிறக்காததால், செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தைப்பேறு பெற முயற்சி மேற்கொண்டனர். எனினும் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன.
இதனால்… திருமணமாகி 57 வருடமாக குழந்தை இல்லாமல் தவித்து வந்த இந்த தம்பதியினருக்கு ஆந்திராவிலுள்ள மருத்துவமனையில் 55 வயது ஆன ஒரு பெண் செயற்கை முறையில் குழந்தை பெற்றதை அறிந்து மகிழ்ச்சி அடைந்து, நாமும் இப்படிச் செய்தால் என்ன என்று யோசித்தனர்.
இதனைத் தொடர்ந்து மங்கயம்மா அந்த மருத்துவமனையில் செயற்கை முறையில் கருத்தரிப்புக்கு சிகிச்சை பெற ஆரம்பித்தார். இந்நிலையில் இவருக்கு இன்று காலை 10.30 மணிக்கு இவருக்கு இரட்டை குழந்தை பிறந்தது.
இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது. இதன்மூலம் அதிக வயதில் குழந்தையை பெற்றுக்கொண்ட இந்திய மூதாட்டி என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்பு 2016ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தல்ஜிந்தர் கவுர் தனது 70ஆவது வயதில் ஆண் குழந்தை ஒன்றை பெற்று எடுத்தார். இதுவரை இவரே அதிகமான வயதில் குழந்தை பெற்ற இந்திய மூதாட்டி என்ற சாதனையை படைத்திருந்தார்.
இப்போதுள்ள காலச் சூழ்நிலையில் இளம் வயதினருக்கே குழந்தைப்பேறு பெறுவது என்பது கடினமாக இருக்கிறது. இதற்கு பல்வேறு மருத்துவக் காரணங்கள் சொல்லப் படுகின்றது.
இதேபோல பல ஆண்டுகளாக குழந்தைப் பேறு இல்லாதவர்கள், செயற்கை கருத்தரிப்பு முயற்சியிலும் தோற்றவர்கள், அரசு காப்பங்களில் குழந்தையை தத்தெடுத்து, தங்கள் குழந்தையின்மை மனக்குறையைப் போக்கிக் கொள்கின்றனர். இருப்பினும் இதிலும் ஏகப்பட்ட நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. எனவே நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் பலருக்கு குழந்தைபேறு என்பது கனவாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், 74 வயதில் மங்கயம்மா இரட்டை குழந்தைக்கு தாய் ஆனது, இத்தனை ஆண்டுகாலம் அவர்களின் காத்திருப்புக்கும் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி என்பதுடன், குழந்தியில்லா ஏக்கத்தில் தவிப்பவர்களுக்கு நல்ல செய்தியாகவும் நம்பிக்கை ஊட்டும் தகவலாகவும் உள்ளது.