புதிய போக்குவரத்து விதிகள் அமல்படுத்தப்பட்ட பிறகு அபராதம் குறித்த தகவல்கள் அதிகம் வெளியாகி வருகின்றன.
சாலை போக்குவரத்து விதிகளை மீறிய டிராக்டர் ஓட்டுநருக்கு புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவில் தில்லி போலீசார் 59 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை பல மடங்கு உயர்த்த வழிவகுக்கும் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த சட்ட திருத்தம் இந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
பல்வேறு மாநிலங்களில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு போலீசார் கடுமையான அபராதம் விதிக்க தொடங்கியுள்ளனர். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் மது அருந்தி முறையான ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டிய ஆட்டோ ஓட்டுனருக்கு 47 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
ஹரியானா மாநிலம் குர்கானில் ஹெல்மெட் அணியாதது முறையான ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு விதி மீறலில் ஈடுபட்ட இரு சக்கர வாகன ஓட்டுனருக்கு போலீசார் 23 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
இந்த நிலையில் தில்லியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் ராம் கோபால் என்ற டிராக்டர் ஓட்டுநர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்தனர்.
ஓட்டுநர் உரிமம் காப்பீடு வாகன பதிவு மற்றும் தகுதி சான்று இல்லாதது சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஆபத்து விளைவிக்கக் கூடிய பொருட்களை ஏற்றிச் செல்வது போக்குவரத்து விதிகளை மீறியது என 10 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து அவருக்கு 59 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கான அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் போலீசார் விதி மீறலில் ஈடுபட்டால் பொதுமக்களிடம் வசூலிப்பதை போல இரண்டு மடங்கு அபராத தொகை வசூலிக்கப்படும் என்று தில்லி போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய சட்டத் திருத்தம் குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறும்போது இந்த புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை மற்ற மாநிலங்கள் எப்படி நடைமுறை படுத்துகின்றன என்பதை கவனித்து வருகிறோம்; தில்லி அரசு அதை இன்னும் அமல்படுத்தவில்லை என்றார்.
ஆனால், முதல்வரின் கருத்துக்கு மாறாக தில்லி போலீசார் ஒரு டிராக்டர் டிரைவரிடம் 59 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர் என்று குற்றம் சாட்டுகின்றனர்.