தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்திரராஜன் இன்று ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா ஆளுநராக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார்.
தெலுங்கானா மாநில ஆளுநராக இன்று தமிழிசை சவுந்திரராஜன் பதவியேற்றார். ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது.
இவருக்கு தெலுங்கானா மாநில உயர்நீதிமன்ற நீதிபதி ராகவேந்திரா எஸ் சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றார். அமைச்சர்கள், வேலுமணி, ஜெயக்குமார், தங்கமணி, தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் கலந்து கொண்டார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், மனைவி ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். பதவியேற்ற கையோடு தந்தை குமரி அனந்தனை சந்தித்த தமிழிசை அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.
தமிழிசை போட்டியிட்ட தேர்தல்களில் இதுவரை தோல்வி அடைந்ததால் தமிழிசை சவுந்திரராஜன் எனும் நான்.. என்பதை அவர் இதுவரை ஒலித்ததே இல்லை. இந்த நிலையில் அந்த ஆசையும் தற்போது நிறைவேறியது.
அது மட்டுமல்லாமல் தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் பெற்றார். அதுவும் தமிழகத்தில் இருந்து நியமிக்கப்பட்டவர் என்ற பெருமை தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. பதவியேற்ற பின்னர் தமிழிசைக்கு மாநில முதல்வர் சந்திரசேகரராவ் வாழ்த்து தெரிவித்தார். பின்னர், நடந்த போலீசார் அணிவகுப்பு மரியாதையையும் தமிழிசை ஏற்று கொண்டார்.