
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள வடமட்டம் பகுதியை சேர்ந்தவர் அப்துல்ஆரிப்.
இவருக்கு திருமணமாகி நிலோபர்பர்வீன் (27) என்ற மனைவியும் ஆப்ரினா (4), ஆப்ரா (2) ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.
அப்துல்ஆரிப் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
நிலோபர்பர்வீன், மகள்களுடன் வடமட்டம் கிராமத்தில் இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை வெகு நேரமாகியும் அவருடைய வீட்டு வாசல் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது நிலோபர்பர்வீன் மற்றும் அவருடைய மகள்கள் ஆப்ரினா, ஆப்ரா ஆகியோர் வீட்டில் பிணமாக கிடந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக பாலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிலோபர்பர்வீன் மற்றும் அவருடைய மகள்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையில் நிலோபர்பர்வீனுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்ததும், இதனால் மனவேதனை அடைந்த அவர் தற்கொலைக்கு திட்டமிட்டதும் தெரியவந்தது.
மேலும் தனக்கு பிறகு குழந்தைகளை யாரும் கவனிக்கமாட்டார்கள் என நினைத்த அவர், குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் குடித்துள்ளார்.
இதுதொடர்பாக பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.