வேலூரைச் சேர்ந்த திருமண தம்பதிகளுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் வலஜாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் டி.எஸ்.ராஜசேகரன். இவர் வட்டார மருத்துவ ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகளான டாக்டர் ராஜஸ்ரீக்கு டாக்டர்.சுதர்சன் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வரும் 11 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் மணமக்களை வாழ்த்த திருமணத்திற்கு வருமாறு பிரதமர் மோடிக்கு ராஜசேகரன், திருமண அழைப்பிதழை தபால் மூலம் அனுப்பி வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை பிரதமர் அலுவலகத்திலிருந்து ராஜசேகரனுக்கு ஒரு தபால் வந்துள்ளது.
அதில் பிரதமர் மோடி, கையொப்பமிட்ட திருமண வாழ்த்து மடல் இருந்துள்ளது. அந்த மடலில், ‘என்னை திருமணத்திற்கு அழைத்தமைக்கு நன்றி, மணமக்களின் வாழ்க்கை இனிதே தொடங்கி, அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய நான் இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன்’ என தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமரின் வாழ்த்து மடலால் மணமக்கள் மற்றும் பெற்றோர் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.