சென்னை பள்ளிக் கரணையில் கடந்த வாரம், சுபஸ்ரீ என்ற இளம் பெண் தன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அதிமுக.,வைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரின் இல்லத் திருமணத்துக்காக வரவேற்பு பேனர்களை சாலை நடுவில் கட்டியிருந்தார்கள். அப்போது திடீரென காற்று அடித்து, பேனர் சுபஸ்ரீயின் மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறிய அந்தப் பெண் சாலையில் விழ, பின்னே வந்த லாரி மோதி உயிரிழந்தார் சுபஸ்ரீ.
இந்தச் சம்பவம் தமிழகம் எங்கும் சோகமான சூழலை ஏற்படுத்தியது. பலரும் பேனர் கலாசாரத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். அவர்களின் கோப வார்த்தைகளால், அரசியல் கட்சியினர் பலரும் தங்கள் தரப்பில் பேனர் வைக்க மாட்டோம் என்று உறுதி கொடுத்தனர்.
பேனர்கள் குறித்து கண்காணிக்கவும் அகற்ற நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் முன் நின்றது. இதனால் சினிமாத்துறை பிரபலங்களும் கூட தங்கள் படத்துக்காக பேனர்கள் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்க மாட்டோம் என திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பேனர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவோம் எனவும் திமுக தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்ட விரோத பேனர் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை திமுக தவறாமல் பின்பற்றும் எனவும், 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் திமுக அளித்த உத்தரவாதமும் பின்பற்றப்படும் எனவும் திமுக.,வின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று திமுக.,வை தோற்றுவித்த அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டும், நாளை திராவிடர் கழகத் தந்தை ஈ.வே.ராமசாமி நாயக்கரின் பிறந்த நாளை முன்னிட்டும், பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப் பட்டிருந்தன. மேலும், வரவேற்பு வளைவுகளும் களை கட்டின. இது குறித்து பலர் அந்தப் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தும் வருகின்றனர்.