திருப்பம் தரும் திடீர் சந்திப்பாக, இன்று தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
மம்தா பானர்ஜிக்கும் மத்தியில் ஆளும் பாஜக., அரசுக்கும் ஏழாம் பொருத்தமாகவே சென்று கொண்டிருந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், பாஜக.,வினர் பிரசாரம் செய்ய பல்வேறு தடைகளை ஏற்படுத்தினார் மம்தா பானர்ஜி. குறிப்பாக, அமித் ஷா, மோடி ஆகியோர் மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று இடம் ஒதுக்க மறுத்தார். அமித் ஷா வந்த ஹெலிகாப்டரை திருப்பி அனுப்பினார். அமித் ஷாவை மேற்கு வங்க மண்ணிலேயே மிதிக்க அனுமதிக்க மாட்டேன் என்று முரண்டு பிடித்தார்.
இந்நிலையில், நேற்று பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசிய மம்தா பானர்ஜி, தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்கப் பட்டால் இன்று சந்திப்பேன் என்று கூறியிருந்தார். அதன்படி, இன்று அவர்களது சந்திப்புக்கு அனுமதி கிடைத்தது.
அதன்படி, இன்று அமித்ஷாவை சந்தித்துப் பேசினார் மம்தா பானர்ஜி. அப்போது, தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு, எல்லை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக அவர் கூறினார்.
முன்னதாக, மம்தா பானர்ஜி தில்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியபோது, மேற்க வங்க மாநிலத்தின் பெயரை மாற்றம் செய்வது குறித்து பேசியதாகவும், பிர்பாம் மாவட்டம், தியோச்சா பச்சாமியில் நிலக்கரி சுரங்க பணிகளை துவக்கி வைக்க வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் கூறினார்.
தொடர்ந்து இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை, ‘பங்களா’ என பெயர் மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளித்தாராம்.
இது குறித்துசெய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பில் 19 லட்சம் பேர் விடுபட்டது குறித்து அமித்ஷாவிடம் மனு அளித்தேன். இந்தப் பட்டியலில் இருந்து இந்தி, வங்காளம், அசாமி மொழி பேசும் உள்ளூர் மக்கள் அதிகளவில் விடுபட்டுள்ளனர். நேர்மையான வாக்காளர்களும் இடம்பெறவில்லை. இது குறித்து ஆராய வேண்டும்.
மேற்கு வங்கத்தில், தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு குறித்து அமித்ஷா எதுவும் கூறவில்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு தேவையில்லை என்பது எங்களது நிலைப்பாடு. இதனை முன்னரே கூறியுள்ளேன் என்று கூறினார்.
இந்நிலையில், அமித் ஷாவுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப் பட்டுவருகின்றன. மம்தா பானர்ஜி சாரதா சிட்பண்ட் ஊழலில் சிக்கிக் கொண்டுள்ள நிலையில், தனது சகாக்கள், காவல் அதிகாரி ராஜீவ் குமார் ஆகியோரை காப்பாற்றும் கடைசிக் கட்ட முயற்சியில் அவர் இறங்கியுள்ளார் என்று கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், காலம் எப்படி மாற்றம் கண்டிருக்கிறது என்றும் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகின்றனர்.