‘காப்பான்’ படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் தெரிவிக்கப் பட்டு வரும் நிலையில், விமர்சகர்கள் மீது விக்னேஷ் சிவன் காட்டத்துடன் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். பொதுமக்கள் எல்லோருமே விமர்சகர்கள் ஆகிவிட்டார்கள் என்று அவர் கோபத்துடன் விமர்சித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி வெளியானது காப்பான். வசூல் ரீதியாக முதல் நாளில் 7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப் படுகிறது. ஆனால், ரசிகர்களிடம் அவ்வளவாக எடுபடவில்லை. முதல் முறை பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகன், செம மொக்க என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான். படம், மிகப் பெரிய முதலீட்டில் தயாரிக்கப் பட்டுள்ளது. எனவே வசூலைப் பொறுத்தே படத்தின் வெற்றி, தோல்வி பேசப் படும். ரசிகனின் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்துவிட்டாலும், வணிக ரீதியாக வெற்றி பெறுமா என்று எதிர்பார்ப்பில் சினி உலகம் இருக்கிறது.
காப்பான்- படம் இரு வேறு விதமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கொடுத்த காசுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று ஒரு விமர்சனம். கதை இல்லை, காட்சிகள் சரியில்லை, யதார்த்தத்தை மீறிய கற்பனைகள், நினைத்துக் கூடப் பார்க்க இயலாத லாஜிக் அற்ற திரைக்கதை என்றெல்லாம் விமர்சிக்கிறார்கள். மூன்று நாயகர்களையும் முழுதாக வீணடித்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. முதல் நாள் முதல் காட்சி பார்த்து வந்த உடனேயே சமூகத் தளங்களில் எதிர்மறை விமர்சனங்கள் கொட்டத் தொடங்கிவிட்டன. இது தொடர்பாக விமர்சகர்கள் குறித்து காட்டமாகப் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கடிதமாக வெளியிட்டுள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன், பொது மக்களெல்லாம் விமர்சகர்கள் ஆகிவிட்டனர் என்று பொருமித் தள்ளியுள்ளார். அதற்கு பதிலளிக்கும் ரசிகர்கள், ஐந்தாம் வகுப்புக் கூட தாண்டாத படிப்பறிவு அற்றவர்கள் எல்லாம் டைரக்டர்கள் ஆகிவிடும் போது, சாதாரண பாமரன் விமர்சகர் ஆவதில் ஒன்றும் தவறில்லையே என்று கூறுகின்றனர்.
தனது டிவிட்டர் பதிவில் விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது:
”இன்று ரசிகர்கள் ஒரு படத்தை ரசிப்பதை விட்டுவிட்டு அதைத் தோண்டுவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் முழுமையான நல்ல முயற்சிகளைப் பாராட்டாமல் சில விமர்சகர்கள் தங்களுடைய புத்திசாலித்தனத்தைக் காட்ட நினைக்கின்றனர்.
ஒரு படம் என்பது, ரசிகர்களின் பல்வேறு தரப்பையும் திருப்திப்படுத்துவதாக இருக்க வேண்டும். இந்தக் காலத்தில் சாதாரண பொதுமக்கள் கூட விமர்சகர்கள் ஆகி விடுகிறார்கள்.
முதலில் படங்களைத் தோண்டித் துருவாமல் அவற்றை ரசிக்கத் தொடங்குவோம். தோல்விகளை மன்னிப்போம். இவ்வுலகில் எதுவுமே சரியானது இல்லை. அப்படியிருக்க ஏன் ஒரு திரைப்படம் மட்டும் சரியில்லாததாக இருக்கக்கூடாது?
சுவாரஸ்யமான திரைக் கதைக்காகவும், பல திருப்பங்களுக்காகவும், நடிகர்களின் நல்ல நடிப்புக்காகவும் இன்னும் பல விஷயங்களுக்காகவும் நான் காப்பானை மிகவும் ரசித்துப் பார்த்தேன்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து விவகாரங்களையும் கொண்டிருக்கும் பிரதமருடைய அலுவலகத்தைப் பற்றிக் காட்ட வேண்டும் என்பதே கே.வி.ஆனந்த் சாரின் நோக்கம். ஒரு பிரதமருடைய பணி என்ன என்பதை ஒரு சதவீதமாவது காட்டவேண்டும்.
பிரதமர் கதாபாத்திரத்தை மோகன்லால் சார் அற்புதமாகச் செய்திருந்தார். சூர்யா சார் ஒவ்வொரு ஃபிரேமிலும் கச்சிதமாக இருக்கிறார். இதற்கு எப்படிப்பட்ட உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவைப்பட்டிருக்கும்? வாழ்த்துகள் சார். ஆர்யாவும் மற்ற நடிகர்களும் கேஷுவலாகவும் கூலாகவும் நடித்துள்ளனர். பார்க்க சீரானதாகவும் நம்பிக்கை மிகுந்ததாகவும் உள்ளது.
‘காப்பான்’ அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் நல்ல படம். உங்கள் குடும்பத்தோடு சென்று பாருங்கள். படத்தில் இருக்கும் தேசபக்தி தருணங்களை ரசியுங்கள். லைகா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தின் திருப்பங்களை ரசியுங்கள்”.
என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சயிஷா சைகல், சமுத்திரக்கனி, சிராஜ் ஜானி, பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ளது ‘காப்பான்’. எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் அடுத்த படத்தை லைகா நிறுவனத்துடன் எதிர்பார்ப்பதால் இவ்வாறு பொங்கியிருப்பதாக சமூகத் தளங்களில் பின்னூட்டங்கள் இடப் படுகின்றன.