இந்திய ராணுவத்தினர் தங்கியுள்ள காட்டுப் பகுதியில் அமைந்த வீடுகளுக்குள் இந்தப் பெரீய்ய யானையார் புகுந்து என்ன செய்கிறார் என்று பாருங்கள்…!
சுசந்தா நந்தா என்ற வனத்துறை அதிகாரி தனது டிவிட்டர் பதிவில் யானை ஒன்று ராணுவத்தினரின் வீட்டுக்குள் புகுந்து துவம்சம் செய்யும் வீடியோவை பகிர்ந்து கொண்டிருந்தார். மேலும், ராணுவ சமையல் அறையில் புகுந்த யானை… அஸ்ஸாம் பினாகுரி பகுதியில். யானைகளால் ஏற்பட்ட மோசமான நேரம்.. என்று குறிப்பிட்டு, வீடியோ பதிவு கமாண்டர் தினேஷ் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் அதற்கு பதில் பதிவு செய்துள்ள ஜயந்த் பட்டாச்சார்யா, இது பினாகுரியில்! அஸ்ஸாமில் இல்லை. இது மேற்கு வங்காளத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மிக சிறிய கிராமம். இங்கே இந்திய ராணுவத்தின் மிகப் பெரிய கண்டோன்மெண்ட் உள்ளது. மிகவும் அழகான இடம். இதனை சரியாக குறிப்பிடுங்கள். .. என்று குறிப்பிட்டு, பதிலளித்திருந்தார்.
இந்த வீடியோ பதிவு, யானைகள் சமையலறைக்குள் புகுந்து, தங்களுக்கு பிடித்த உணவுப் பொருள்களை எடுத்து உண்டுவிட்டு, துவம்சம் செய்வதைக் குறிப்பிடுகிறது. அவ்வளவு பெரிய யானை ஒன்று, எவ்வாறு அந்த மிகச் சிறிய வாசல் வழியாக, கதவுகளை இடித்துக் கொண்டு, நிலைப் படியில் தலை தட்டாமல் கால்களை மடக்கி, உடலைக் குறுக்கி சமையல் அறைக்குள் செல்கிறது என்பதைக் காட்டுகிறது.
மலைப் பகுதியை ஒட்டிய கிராமங்களில் வயல்களில் பயிரிடப் பட்டுள்ள பயிர்களை, வாழைத் தோப்புகளை கரும்புத் தோட்டதை என யானைகள் துவம்சம் செய்வதை நாம் செய்திகளில் பார்த்திருப்போம், நேரடியாகவும் அனுபவித்திருப்போம். ஆனால், ஒரு சமையலறைக்குள் உடலைக் குறுக்கி அவ்வளவு லாகவமாக ஒரு யானை செல்லும் வீடியோ பதிவைப் பார்த்தவர்கள் மெய்சிலிர்த்துப் போகிறார்கள்.
சாப்பாடுன்னு வந்துட்டா… நாங்க எந்த சின்ன சந்துபொந்தையும் விட்டுடமாட்டோம்ல…! என்கிறது இந்த கஜேந்திரன்!